அரசியல் என்றாலே இப்படித்தானே.. குஷ்பு மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா என்ன!
சென்னை: அரசியலில் நேற்று வரை ஒரு கட்சியை அதன் கொள்கையை கடுமையாக விமர்சித்து, அவதூறாகவும் திட்டி தீர்த்துவிட்டு அதற்கு அடுத்த நாளே அதே கட்சியில் சேர்கிறார்கள். தேர்தல் வெற்றியும், சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு இங்கு பலர் இருக்கிறார்கள். இப்படி செய்வதற்காக அவர்கள் யாருக்கும் வெட்கமும் இல்லை. கொள்கையும் இல்லை. இதற்கு குஷ்பு மட்டும் விதிவிலக்கா என்ன?
Recommended Video
நடிகையும், முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமாகிய குஷ்பு இப்போது பாஜகவில் இணைந்துள்ளார். தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் அவர் இணைந்துள்ளார்.
இதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானத்தில் குஷ்புவும், அவரது கணவர் சுந்தர் சியும் டெல்லிக்கு சென்றனர். அப்போது குஷ்பு செய்தியாளர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
காங்கிரஸில் இருந்து விலகிய கையோடு.. பாஜகவில் ஐக்கியமானார் நடிகை குஷ்பு!
புறக்கணித்த தலைவர்கள்
இந்நிலையில் இன்று காலை அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் கடிதம் எழுதிய அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு சேர காரணமாக சொல்வது, தன்னை அங்குள்ள மூத்த தலைவர்கள் மதிக்கவில்லை என்பதுதான். உரிய முக்கியத்துவம் அளிக்காமல் புறக்கணித்ததால் விலகுவதாக குஷ்பு கூறியிருக்கிறார்.
கொள்கையும் இல்லை
தமிழக அரசியல் கட்சியில் பல்வேறு தலைவர்களுக்கு எந்த கொள்கையும், எந்த சிந்தாந்தமும் முக்கியமில்லை. தேர்தல் வெற்றியும். சம்பாதிப்பதும் மட்டுமே இப்போது முக்கியமாக உள்ளது. இது தவறா? சரியா? என்ற விவாதத்திற்குள் செல்ல வேண்டாம். ஆனால் அதேநேரம் நேற்று வரை ஒரு கட்சியை கடுமையாக விமர்சித்து, அவர்களின் திட்டங்களை திட்டிவிட்டு அடுத்த நாளே பாராட்டி அந்த கட்சியில் இணைந்து அவர்களுக்காக நேற்று வரை பணியாற்றிய கட்சியை விமர்சிக்கிறார்கள். இப்படி பேச இவர்கள் எந்த வெட்கமும் படவில்லை என்பதும் இவர்களுக்கு எந்த கொள்கையும் இல்லை என்பதே கசப்பான உண்மை. அப்படிப்பட்ட தலைவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகமிக அதிகம். இந்த லிஸ்டில் இப்போது குஷ்பும் இணைந்துவிட்டார்.
வெற்றி மட்டுமே
நம்முடைய அரசியல் கட்சிகளுக்கும் சரி, அரசியல் தலைவர்களுக்கும் சரி, கொள்கை, சித்தாந்தம் என்பது அடுத்து தான். தேர்தல் வெற்றி பெறுவதுதான் முக்கியம். அத்துடன் தங்கள் நலன் மட்டுமே முக்கியம் என்று மாறிவிட்டார்கள். அதன்பிறகே மக்கள் நலனை பார்க்கிறார்கள். தேர்தல் நெருங்கும் வேளையில் இன்னும் பல அரங்கேற்றங்களை தமிழகம் பார்க்க போகிறது. அதற்காக அரசியல் கட்சிகள் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதே எதார்த்தம்
இன்று எதிரி நாளை நண்பன்
பாஜகவை நேற்று வரை இந்துத்துவா கட்சி என்று விமர்சித்த பலர் இனி அந்த கட்சியை ஆதரித்து பேசத்தான் போகிறார்கள். பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த பலர் இனி அவரை பாராட்டத்தான் போகிறார்கள். இது தவறா? சரியா? என்ன விவாதமே இங்கு தேவையில்லை. ஏனெனில் அரசியலில் எதுவும் இங்கு நிரந்தரம் இல்லை. இன்று எதிரி, நாளை நண்பன், என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. கவுண்டமணி பாசையில் சொல்வது என்றால் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா..!