முட்டை வீச்சு முதல் பாஜக வரை.. 10 வருடங்களில் 3 கட்சி தாவிய குஷ்பு.. சொன்ன காரணங்கள் செம
சென்னை: நடிகை குஷ்புவின் அரசியல் வாழ்க்கை அவர் நடித்த படங்களை போலவே ஜனரஞ்சகமானது. 10 வருடங்களில் அவர் 3 கட்சிகளுக்கு தாவியுள்ளது அதற்கு ஒரு நல்ல உதாரணம்.
ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சி நடத்தி, விதவிதமான ஜாக்கெட்டுகளால் பெண்களை கவர்ந்தவர் குஷ்பு. ஜெயலலிதா ஆதரவாளர் என்று அறியப்பட்ட அவர், யாரும் எதிர்பார்க்காமல், 2010ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
ஆனால், ஒரு ஜனரஞ்சக படத்தில் வில்லன் இல்லாவிட்டால் நல்லா இருக்குமா.. அவருக்கும் வில்லனாக வாய்த்தது வாய்தான்.
யாரிடமும் சிக்காத.. குஷ்புவையே வீழ்த்திய பாஜக.. பலமான வலை.. அடுத்து யாரெல்லாம்?.. மிரட்சியில் திமுக!
வாயால் வந்த பிரச்சினை
கருணாநிதி காலத்திற்கு பிறகு யார் திமுக தலைவர் என்ற ஐயப்பாடுகள் சிலருக்கு இருந்த காலகட்டம் அது. குஷ்பு, சும்மா இருக்காமல், "திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின்தான் என இருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை" என குஷ்பு சொல்லிவிட்டார். அவ்வளவுதான், திமுகவினர் கொந்தளித்துவிட்டனர்.
திமுகவிலிருந்து விலகிய குஷ்பு
திருச்சி சென்ற குஷ்பு மீது முட்டை வீசப்பட்டதாக தகவல் உண்டு. இதனால் கட்சிக்கு குட்பை சொல்லிவிட்டு காங்கிரசுக்கு போனார். "திமுகவில் கடின உழைப்பு என்பது ஒருவழிப் பாதையாக மட்டுமே உள்ளது," என்று அப்போது அவர் கூறியிருந்தார். திமுகவில் இருந்து விலகிய சில மாதங்களில், அவர் காங்கிரஸில் சேர்ந்தார்.
வீட்டை வந்தடைந்தேன் என்றார்
2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த குஷ்பு, நான் என் வீட்டை வந்தடைந்ததைப் போல உணர்கிறேன், என்று நெகிழ்ச்சியோடு கூறினார். . 2015ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் குஷ்பு. ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் குஷ்பு போட்டியிட எந்த தொகுதியும் ஒதுக்கப்படாததால், அதிருப்தியடைந்தார்.
மோடிதான் சரியான வழி
இந்த நிலையில்தான், இன்று, பாஜகவில் சேர்ந்துள்ளார் குஷ்பு. இதுவரை 2 கட்சிகள் மாறினாலும், ஏறத்தாழ ஒரே கொள்கை கொண்ட கட்சிகள். இப்போது, பாஜக இவ்விரு கட்சிகளுக்கும் எதிரான கொள்கை கொண்ட கட்சியாகும். பாஜகவில் இணைந்த பிறகு அளித்த பேட்டியில், பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது, எனது கடமையை முழுமையாக செய்வேன். மோடி இந்தியாவை சரியான பாதையில் வழிநடத்தி செல்கிறார் என்றார். பார்ப்போம்.. குஷ்புவிற்கு, பாஜகவிலாவது நிம்மதி கிடைக்கிறதா என்பதை.