அரசியலை விட்டு விலகப் போகிறாரா குஷ்பு?.. பரபரப்பைக் கிளப்பிய டிவீட்
சென்னை: எந்த ஒரு ஏற்றமும் கிடைக்காத நிலையில் அரசியலைவிட்டு விலக முடிவு செய்துவிட்டார் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு என்று பரபரப்பு கிளம்பியுள்ளது.
தாம் திரும்பவும் சினிமாவில் நடிக்க விரும்புவது தொடர்பாக ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் கருத்து கேட்டு வருகிறார் குஷ்பு. இதுதான் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழ் திரை உலகில் கோலோச்சிய நடிகை குஷ்பு சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். டிவி சீரியல்களிலும் தலைகாட்டி வருகிறார். கமல், ரஜினி என உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து அசத்திய அவர் ஒரு நல்ல நாளில் திடீரென கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
குஷ்புவுக்கு கடும் எதிர்ப்பு
ஆனால் குஷ்புவின் வருகையை கருணாநிதியின் குடும்பம் விரும்பவில்லை. தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரானவராக அவர் உருவெடுத்து வருவதாக ஒரு கருத்து திமுகவில் ஓடியது. இதனால் குஷ்பு கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிட்டது.
காங்கிரஸில் அக்கப்போர்
இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் குஷ்பு இணைந்தார். தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பையும் குஷ்பு பெற்றார். காங்கிரஸில் நடிகை நக்மா, குஷ்பு இடையேயான மோதல் பல நேரங்களில் வெளிப்பட்டது. தமிழக காங்கிரஸிலும் குஷ்புவுக்கு அவ்வளவாக மரியாதை கிடைக்கவில்லை.
தேர்தலில் போட்டியிட விருப்பம்
இந்நிலையில் லோக்சபா தேர்தலில் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குஷ்புவுக்கு சீட் தரப்படவில்லை. மேலும் தேசிய அளவில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. காங்கிரஸில் சமூக வலைதளங்களுக்கு பொறுப்பானவராக இருந்த நடிகை குத்து ரம்யா ஏற்கனவே கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார்.
|
அரசியலை விட்டு விலகும் குஷ்பு?
இதே பாணியில் தற்போது குஷ்புவும் தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் தாம் திரும்பவும் சினிமாவில் நடிக்க வருவது பற்றி ரசிகர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்தவர்களுக்கு தனித்தனியே நன்றியும் தெரிவித்து வருகிறார் குஷ்பு.