அதிமுக ஆதரவாளர்- திமுக ஸ்டார் பேச்சாளர்- காங். செய்தி தொடர்பாளர்.. குஷ்பு கடந்து வந்த அரசியல் பாதை
சென்னை: அதிமுக ஆதரவாளர், திமுக நிர்வாகி, காங்கிரஸ் பொறுப்பாளர் என ஒவ்வொரு கட்சியாக நகர்ந்து இப்போது பாஜகவில் கரைசேருகிறார் நடிகை குஷ்பு. தமிழக அரசியல் களத்தில் சர்ச்சைகள், தாக்குதல்கள், அவமரியாதைகளைத்தான் இதுவரை குஷ்பு எதிர்கொண்டிருக்கிறார் என்பது அவரது வரலாறு.
தமிழக அரசியலில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகை குஷ்புவும் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். 2010-ம் ஆண்டு திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைவதற்கு முன்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவாளராக அறியப்பட்டவர் நடிகை குஷ்பு.
ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த குஷ்பு அதிமுகவின் ஒரு அங்கமாக பார்க்கப்பட்டார். பின்னர் 2010-ல் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அந்த கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் குஷ்பு. ஆனால் திமுகவில் இணைந்த நாள் முதல் 2014-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நாள் வரை சர்ச்சைகளில் சதா இடம்பிடித்தவர் குஷ்பு.
காவி உடை தரித்து வடக்கே போவதை ட்விட்டரில் சூசகமாக அறிவித்த குஷ்பு !
திமுகவில் ஸ்டாலின் எதிர்ப்பு
2011 சட்டசபை, 2014 லோக்சபா தேர்தல்களில் குஷ்புவும் திமுகவுக்கு பிரசாரம் செய்தார். ஆனால் குஷ்புவுக்கு திமுகவில் என்ன இடம் என பார்க்கப்பட்ட ஒவ்வொரு பார்வையிலும் அது சர்ச்சையாகவே இருந்தது. இந்த சூழ்நிலையில், திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின்தான் என இருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என குஷ்பு கொடுத்த பேட்டி அந்த கட்சியில் பெரும் கொந்தளிப்பையே ஏற்படுத்திவிட்டது.
குஷ்பு மீது சரமாரி தாக்குதல்
இந்த பேட்டி வெளியான நேரத்தில் திருச்சிக்குப் போன குஷ்பு மீது ஒட்டுமொத்த ஆத்திரத்தை திமுக தொண்டர்கள் காட்டினர். குஷ்பு திருச்சியில் தாக்கப்பட்டார்... சென்னையில் அவரது வீடு மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. அந்த பேட்டியுடன் திமுகவில் குஷ்புவின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. ஆனாலும் சில காலம் இந்த எதிர்ப்புகளுடன் குஷ்பு திமுகவில் தாக்குப் பிடித்தார். ஒருகட்டத்தில் வேறுவழியே இல்லாமல் குஷ்பு திமுகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
காங்கிரஸில் ஐக்கியம்
2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து குஷ்பு வெளியேறிய போது அவர் பாஜகவில்தான் இணைவார் என அடித்து சொல்லப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அங்கேயும் குஷ்புவுக்கு எதிரான அலைகள் வெடித்தன.
குஷ்பு-நக்மா மோதல்
காங்கிரஸ் கட்சியில் நடிகை நக்மாவுக்கும் குஷ்புவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து நக்மா நீக்கப்பட்டதற்கு குஷ்புதான் காரணம் என கூறப்பட்டது. தமிழக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஆயிரத்தெட்டு கோஷ்டிகளில் ஒவ்வொரு கோஷ்டியிலும் குஷ்புவுக்கு இடம் கொடுக்கபட்டது.
காங். பாஜக ஊசலாட்டம்
காங்கிரஸிலும் அவமரியாதைகளை எதிர்கொண்ட போதும் அதை சகித்துக் கொண்டு டெல்லி செல்வாக்கில் தொடர்ந்து காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளராக வலம் வந்தார் குஷ்பு. இருப்பினும் தமிழக காங்கிரஸ் கட்சியின் அரசியல் போக்குகளுக்கு குஷ்புவால் வளைந்துபோக முடியாத சூழ்நிலை உருவானது. அதேநேரத்தில் பாஜக மீதான ஒருவிதமான பாசத்தை ட்விஸ்டுகளுடன் வெளியிட்டும் வந்தார் குஷ்பு. இதனால் பாஜக தலைவர்கள் இடைவிடாமல் குஷ்புவை அந்த கட்சிக்கு அழைத்துக் கொண்டே இருந்தனர்.
காவி உடை தரித்து...
இப்போது குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு கூட நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டார். அதற்கு முன்னதாகவே காவி உடை தரித்து வடக்கே போவதை தமது ட்விட்டர் பக்கத்திலும் அறிவித்துவிட்டார் குஷ்பு. இத்தனை ஆண்டுகால அரசியல் அக்கப்போர்களுக்கு குஷ்புவின் இந்த வடக்கத்தி பயணமாவது நிம்மதியைத் தருமா? என்பதை வரும் நாட்கள் சொல்லும்.