இப்படி நடக்குமா.. தமிழக பாஜக தலைவர் + முதல்வர் வேட்பாளராவாரா குஷ்பு.. பெரும் எதிர்பார்ப்பு!
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு நீண்ட நெடுங்காலமாக பிரபலமான ஒரு முகத்தை தேடிக் கொண்டிருந்தனர் அதன் தலைவர்கள். இப்போது தமிழக ரசிகர்களால் கோவில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகை குஷ்பு கட்சியில் இணைந்திருப்பதால் அவரை தமிழக பாஜக தலைவர் ப்ளஸ் முதல்வர் வேட்பாளராக டெல்லி மேலிடம் அறிவித்தாலும் ஆச்சரியப்படப்போவதில்லை என்கின்றன கமலாலய வட்டாரங்கள்.
ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்தை பின்பற்றி பிராமணர் ஜாதியின் தலைமையின் கீழ் பாரதிய ஜனதா கட்சி இயங்கியது எல்லாம் ஒரு காலம். கமண்டல (இந்துத்துவா) அரசியல் பேசிய பாரதிய ஜனதாவுக்குள்ளும் மண்டல் அரசியல் (அனைத்து ஜாதியினருக்கும் பொறுப்பு) வேர்பிடித்து நிற்கிறது. இதன் சாட்சிகளாக பிரதமர் மோடி முதல் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் வரை சொல்லலாம்.
தமிழக பாஜகவில் ஏகப்பட்ட துணைத் தலைவர்கள்.. அப்ப குஷ்புவுக்கு தேசிய பதவி? ஆனால் கிடைக்கவிடுவாங்களா?
சீனியர்களின் ஆக்கிரமிப்பு
இதனால் நீண்டகாலம் செம காண்டிலும் கடுப்பிலும் பாஜகவில் கோலோச்சிய, பாஜகவை குத்தகைக்கு எடுத்திருந்த தலைவர்கள் இருந்து வருகின்றனர். தமிழிசை சவுந்தரராஜனாகட்டும் எல். முருகனாகட்டும் போன்றவர்கள் பாஜகவின் தலைவர் பதவியை பெற்ற போது இந்த ஆதிக்க சக்திகள் காட்டிய புறக்கணிப்பும் ஆட்டுவிப்பும் மறக்க முடியாதவை. அதுவும் தமிழக பாஜகவின் முதல்வர் தலித் தலைவராக இருந்த கிருபாநிதி பட்டபாட்டை கமலாலய சுவர்கள் கதறி கதறி சொல்லும்.
நேற்று விமர்சித்த குஷ்பு இன்று ஐக்கியம்
இப்போது இஸ்லாமியரான நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியை தூக்கி கடாசிவிட்டு பாஜகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். இத்தனைக்கும் கடந்த வாரம் வரை பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தவர். பாஜக தொண்டர்களை ரூ2-க்கு ட்வீட் போடும் வதந்தியாளர்கள் என வசைபாடியவர். பாஜகவை மிக கடுமையாக விமர்சித்தவர்களில் குஷ்புவுக்கும் ஒரு இடம் எப்போதும் உண்டு. இப்போது அந்த குஷ்புதான் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார்.
குஷ்புவை வைத்து கேம் ஸ்டார்ட்
திமுகவில் கருணாநிதி முன்னிலையிலும் காங்கிரஸில் சோனியாகாந்தி முன்னிலையிலும் அந்த கட்சிகளில் இணைந்த குஷ்புவுக்கு பாஜக எப்படியான மரியாதை கொடுத்திருக்கிறது? கட்சியின் பொதுச்செயலாளர் சிடி ரவி முன்னிலையில்தான் அவர் பாஜகவில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் கூட குஷ்புவின் வருகையை தமிழக பாஜகவில் நீண்டகாலம் அடுத்த பதவிகளுக்காக இலவு காத்த கிளிகளாக இருக்கும் ஏகப்பட்ட பேர் கண்கொத்தி பாம்பாக கண்காணித்து ஆடுபுலி ஆட்டத்துக்கு தயாராகத்தான் இருக்கின்றனர்.
இப்படியும் நடக்குமா?
ஏனெனில் இப்போது தமிழக பாஜக தலைவர்கள் அத்தனை பேர் மீதும் கடுமையான அதிருப்தியில்தான் டெல்லி மேலிடம் இருந்து வருகிறது. இதனால்தான் தமிழக பாஜக தலைவர்கள் ஒருவருக்கு கூட ஒரு தேசிய பதவியைத் தராமல் அவமானப்படுத்தி கோபத்தை காட்டியது. இந்த நிலையில் குஷ்புவின் வருகையும் அவருக்கான பதவியும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அத்தனை பாஜக சீனியர்களுக்கும் ஆப்பு வைக்கும் வகையில் தமிழக பாஜக தலைவராக குஷ்பு அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கும் இல்லை. ஏன் பாஜக தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளரே குஷ்புதான் என்று அறிவித்தாலும் கேட்பாரும் யாரும் இல்லைதான்.