சென்னையில் தந்தையுடன் பைக்கில் சென்ற 3 வயது குழந்தை மாஞ்சா நூல் அறுத்து உயிரிழப்பு
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் இருசக்கர வானத்தில் தந்தையுடன் சென்ற 3 வயது குழந்தை அபினேஷ் காற்றாடியின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநிலத்தை பூர்வீகமாககொண்டவர் மோகித். இவர் சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் தனது 3 வயது ஆண் குழந்தை அபினேஷ் உடன் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது மேலே பறந்துவந்த மாஞ்சாநூல் காத்தாடி 3 வயது குழந்தை அபினேஷின் கழுத்தில் சிக்கி அறுத்தது. இதில் தந்தையின் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் அபினேஷ் பலத்த காயம் அடைந்தான்.
இதையடுத்து படுகாயம் அடைந்த குழந்தை அபினேஷ்சை உடனடியாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அபினேஷ் பரிதாபமாக இறந்து போனான். இதுகுறித்து ஆர்கே நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வடசென்னை பகுதிகளில் மாஞ்சா நூல் கயிற்றில் அடிக்கடி காற்றாடி பறக்க விடுவதன் காரணமாக அவ்வப்போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கிறது எனவே காற்றாடியில் மாஞ்சா கண்ணாடி துகள்கள் வைத்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை கொருக்குபேட்டை பகுதியில் மாஞ்சா நூல் காற்றாடி வைத்துள்ளர்களா என போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் மஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட போலீசார் தடை விதித்து உள்ளனர் எனினும் தடையை மீறி மஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடுவது அடிக்கடி நடக்கிறது.