தமிழக மக்களை கொச்சைப்படுத்தி விட்டார் கிரண்பேடி.. பேரவைக்கு வெளியே கொந்தளித்த ஸ்டாலின்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனை குறித்து புதுவை மாநில ஆளுநர் கிரண்பேடி பதிவிட்டுள்ள கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்றத்திலிருந்து ஸ்டாலின் தலைமையில் திமுக வெளிநடப்பு செய்தது.
முன்னதாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து, புதுச்சேரி மாநில கவர்னரான கிரண்பேடி கருத்து தெரிவித்தருந்தார். அதில் தமிழகத்தில் நடைபெற்று வரும் மோசமான ஆட்சியே, தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்தியாவின் பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தவிர மக்களின் சுயநலமும், மோசமான அணுகுமுறையும் கூட தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் என காட்டமாக விமர்சித்திருந்தார்.
தமிழக அரசு பற்றியும் தமிழக மக்கள் பற்றியும் கிரண்பேடியின் விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்நிலையில் தமிழக பேரவையில் திமுக சார்பில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதன் மீதான விவாத்தின் போது, திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை வரவேற்பதாக கூறினார். அதே சமயம் குடிநீர் பிரச்சனை முன்கூட்டியே கணித்து தீர்க்க தவறியதாக தமிழக அரசை விமர்சித்தார்
2020-ம் ஆண்டில் சென்னையில் நிலத்தடி நீா் முற்றிலும் வற்றிவிடும் என்று நிதி ஆயோக் எச்சரித்துள்ளது. ஆனால், அந்த நிலை தற்போதே ஏற்பட்டுவிட்டது என சாடினார். மேலும் தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் தோல்வியடைந்துவிட்டதாக பேசிய ஸ்டாலின், குடிநீர் பிரச்சனை பற்றி பேரவையில் விவாதிக்க நாள் முழுவதையும் ஒதுக்குமாறு கோரினார்.
ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசை குற்றம்சாட்டி புதுவை கவர்னர் கிரண்பேடி கூறியது பற்றி சபையில் ஸ்டாலின் பேசினார். ஆனால் ஸ்டாலின் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதனால் ஆவேசமடைந்த திமுகவினர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் தண்ணீர் பஞ்சம் விவகாரத்தில் தமிழக மக்களை பற்றி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கூறிய கருத்துகள் தவறானவை என்றார். கிரண்பேடி தனது கருத்துகளின் மூலம் தமிழக மக்களை அவமதித்துள்ளதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், இது தொடர்பாக தாம் சட்டமன்றத்தினுள் பேசியதையும் அவைகுறிப்பிலிருந்து நீக்கி விட்டனர்.
இவர்களின் செயல்பாடுகளை பார்த்தால் கிரண்பேடி கூறிய குற்றச்சாட்டுகளை தமிழக அரசு மனமுவந்து ஒப்புக் கொண்டுள்ளது போல உள்ளது. புதுவை ஆளுநா் கிரண்பேடி தமிழக அரசு மீது கூறி கருத்தைக் கூட சகித்துக் கொள்வோம். ஆனால் தமிழக மக்களை கொச்சையாக பேசி, அவமதிக்கும் வகையில் அவா் கருத்து பதிவிட்டுள்ளது மிகவும் தவறு என ஆவேசமாக கூறினார்