"ஒன்னும் புடுங்க முடியாது".. முழங்கிய கிஷோர் கே சாமி.. போனை பறிமுதல் செய்திருக்கோம்..போலீஸ் விளக்கம்
கிஷோர் கே ஸ்வாமி கைதாகி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்
சென்னை: "மை டியர் ஆம்னி பஸ் ஆண்டி.. நீ அடிச்சு தூக்கினாலும் சரி.. தூக்கிட்டு அடிச்சாலும் சரி.. என்னை ஒன்னும் புடுங்க முடியாது" என்று பெண் பத்திரிகையாளரை பற்றி மகா மட்டமாக ஒரு பதிவு போட்ட கிஷோர் கே சுவாமியை கைது செய்து விடுவித்த விவகாரத்தில் தற்போது சென்னை போலீஸார் ஒரு விளக்கத்தை அளித்துள்ளனர்.
Recommended Video
கிஷோர் கே சாமி கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அவரது செல்போனை பறிமுதல் செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் போலீஸார் குறித்து அவதூறாக செய்தி போடக் கூடாது என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
கிஷோர் கே சுவாமி.. மற்றவர்களை மட்டம் தட்டி டிவீட், போஸ்ட் போடுபவர் என்றும் சொல்லலாம். குறிப்பாக பெண்களுக்கு எதிரான பதிவுகளே அதிகம். அதிலும் பெண் பத்திரிகையாளர்கள் என்றால் ஸ்வீட் சாப்பிடுவது போல இவருக்கு. பதிவுகள் அனைத்துமே சாதீய ரீதியாகவும், மத சகிப்புதன்மை இல்லாமலும், வெறித்தனமான பதிவுகளாகவும் இருக்கும்.
நாகரீகம்
இன்ன இன்ன வார்த்தைகளில்தான் பேசவேண்டும் என்ற வரைமுறை, நாகரீகம் இல்லாமல் மிக மோசமான வார்த்தைகளை அள்ளித் தெளித்து விமர்சித்து வந்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும் அவதூறு பரப்பும் வகையிலும் இப்படியே பதிவுகளை போட்டு வந்ததால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக கடந்த வருடம் போலீஸ் கமிஷனரிடம் புகார் கூட அளிக்கப்பட்டது.
சைபர் கிரைம்
கிஷோர் கே சுவாமி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் சைபர் கிரைம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைதும் கூட செய்தனர். சைதாப்பேட்டை கோர்ட்டிலும் ஆஜர்படுத்தினர். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே ஜாமீன் வாங்கி கொண்டு வெளியே வந்து விட்டார் இந்த ஆசாமி.
அநாகரீக பதிவு
இந்த நிலையில் நேற்று காலை கிஷோர் கே சுவாமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "மை டியர் ஆம்னி பஸ் ஆண்டி.. நீ அடிச்சு தூக்கினாலும் சரி.. தூக்கிட்டு அடிச்சாலும் சரி.. என்னை ஒன்னும் புடுங்க முடியாது என்று சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரை மிக மிக கேவலமாகவும், கொஞ்சம்கூட நாகரீகம் இல்லாமலும், அருவறுப்பாகவும் பேசி ஒரு பதிவை போட்டிருந்தார்.
வழக்கு பதிவு
இது சம்பந்தமாக மறுபடியும் கமிஷனர் அலுவலகத்தில் பெண் பத்திரிகையாளர் புகார் தந்தார்.. சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை நடத்தி கிஷோர் கே.சுவாமி மீது வழக்கு பதிவு செய்தனர்... பின்னர், சுவாமியை தேடி அவர் வீட்டிற்கு போலீசார் சென்று பார்த்தனர்.. அவர் அப்போது வீட்டில் இல்லை.
யூ-டியூப்
அதனால், அவரது செல்போன் சிக்னலை வைத்து எங்கிருக்கிறார் என்று டிரேஸ் செய்தனர்.. இந்த நிலையில் ஒரு தனியார் யூ-டியூப் சேனலில் இருந்த கிஷோர் கே.சுவாமியை போலீசார் நேற்றிரவு அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அந்த நபர் கைது செய்யப்பட்டதாக பரவியது. இரவிலும் கூட அந்த செய்திதான் படு சூடாக சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால், வழக்கம்போல், கொஞ்ச நேரத்தில் வெளியே வந்து விட்டார் கிஷோர் சாமி என்கிற அந்த ஆசாமி.
எச்.ராஜா
அதற்கு முன்பாக, மத்திய ஆளும் கட்சியான, பாஜகவின் தேசிய செயலாளரான எச். ராஜா போன்றோர் கிஷோர் கே சுவாமி கைதால் கடும் கோபமடைந்து தொடர்ந்து டிவீட்டுகள் போட்டவண்ணம் இருந்தனர். இந்த நபர் விடுதலை செய்யப்பட்டதும் அதுதொடர்பான செய்தியையும் மகிழ்ச்சியுடன் எச். ராஜா வெளியிட்டிருந்தார். இவரது விடுதலைக்கு உதவியவர்களுக்கு நன்றியும் சொல்லியிருந்தார்.
ஆச்சரியம்
இதனால், பத்திரிகையாளர்கள் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.. இதை கண்டித்து ட்விட்டரில் #shameonchennaipolice என்ற ஹேஷ் டேக்கில் கருத்துக்களையும் சூடாகவே பதிவிட்டனர்.. இந்நிலையில் சென்னை மாநகர காவல்துறை இது தொடர்பாக விளக்கம் ஒன்றினை அளித்துள்ளது.. அதில் பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்டவரை அழைத்து விசாரணை மட்டுமே செய்தோம்.. கைது செய்யப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது. மேலும் அநாகரீகமாக சமூக வலைதளங்களில் கருத்தைப் பதிவிட வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.