DMK Alliance: உதயசூரியன் சின்னத்தில் கொ.ம.தே.க போட்டி… ஒரு இடம் ஒதுக்கீடு
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஈஸ்வரன் இடையே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற பணிபுரிவோம் என்றார். 21 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எதுவும் பேசவில்லை எனவும் அவர் விளக்கமளித்தார்.
உதயசூரியன் சின்னத்தில் தாங்கள் போட்டியிடுவதாகவும் ஈஸ்வரன் தெரிவித்தார். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக, உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.