வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில்... விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு பிடுங்குவதா...? -கொங்கு ஈஸ்வரன்
சென்னை: விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதிக்க கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் கொங்கு ஈஸ்வரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே எதிர்காலம் தெரியாமல் திகைத்துப்போய் நிற்கும் விவசாயிகளை வீழ்த்த முயற்சிப்பது அரசாங்கத்திற்கு அழகல்ல என அவர் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
102 எம்எல்ஏக்களின் ஆதரவா?.. கெலாட் சொல்வது சுத்த பொய்.. மல்லுக்கட்டும் சச்சின் பைலட்
வளர்ச்சித் திட்டம்
மின் வாரியத்தினுடைய உயர்மின் அழுத்த கோபுரங்கள், கெயில் நிறுவனத்தினுடைய எரிவாயு குழாய்கள், ஓஎன்ஜிசியினுடைய பலதரப்பட்ட குழாய்கள் போன்ற பல்வேறு விதமான வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு பிடுங்குகின்ற திட்ட செயல்பாடுகளை கொண்டு தொடர்ந்து தமிழக விவசாயிகள் பயமுறுத்தப் படுகிறார்கள்.
விடாப்பிடியாக
தற்போது இந்திய அரசின் பாரத் பெட்ரோலிய நிறுவனம் கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு எண்ணெய் குழாய் பதிக்கின்ற திட்டத்தை யாரையும் கருத்து கேட்காமல் உருவாக்கி தற்போது கொரோனா பாதிப்பு காலத்தில் விவசாயிகளை மிரட்டி விளைநிலங்களில் பதிக்க முயற்சிக்கிறார்கள். எல்லா மாவட்டங்களை சார்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பாரத் பெட்ரோலிய நிறுவனம் விடாப்பிடியாக திட்டப்பணிகளை தொடங்க முயற்சிக்கிறது.
ஈஸ்வரன் சாடல்
எதிர்ப்பை தாண்டி விவசாயிகள் தற்போது நிலத்தில் இறங்கி போராட ஆரம்பித்திருக்கிறார்கள். கொரோனா பாதிப்பினால் நாம் என்ன ஆவோம் என்று எதிர்காலம் தெரியாமல் திகைத்துப்போய் இருக்கின்ற விவசாயிகளை வீழ்த்த முயற்சிப்பது அரசாங்கத்திற்கு அழகல்ல. களநிலவரம் பற்றி புரிந்து கொள்ளாமல் பாரத் பெட்ரோலிய நிறுவனம் எளிதாக விவசாயிகளை விரட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் இருப்பது அவர்களுடைய செயல்பாடுகளில் கண்கூடாக தெரிகிறது.
குழாய் பதிப்பு
போராடுவதற்காக கிராமப்புறங்களில் விவசாய குடும்பங்கள் ஒன்றாக கூடும்போது தனிமனித விலகல் என்பது சாத்தியமில்லாத ஒன்றாகிப் போகும். தமிழக அரசும், அனைத்து தமிழக கட்சிகளும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து கொரோனாவை ஒழிக்கின்ற போரிலே களத்தில் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கும் போது இதுதான் சரியான நேரம் என்று பாரத் பெட்ரோலிய நிறுவனம் குழாய் பதிப்பை செயல்படுத்த முயற்சிப்பது பச்சை துரோகம்.
போராடத் தயார்
மத்திய அரசு நிறுவனத்தினுடைய செயல்பாடுகளை உடனடியாக மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிப்பு திட்டத்தை நெடுஞ்சாலைகள் வழியாக எடுத்து செல்வதற்கு அறிவுறுத்த வேண்டும். கோவை இருகூரிலிருந்து கர்நாடகா வரை நெடுஞ்சாலை வழியாக எடுத்து செல்லக்கூடிய திட்டத்தை மாநில அரசு வகுத்து பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும். எண்ணெய் குழாய் பதிப்பின் பாதையை மாற்றுவதற்கு விவசாயிகளோடு சேர்ந்து போராடுவதற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தயாராக இருக்கிறது.