சுங்க கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்: கொமதேக ஈஸ்வரன் கண்டனம்
சென்னை: தமிழகத்தில் சுங்க கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த சுங்க கட்டண உயர்வால் அன்றாடம் மக்கள் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் நிலை உருவாகியிருக்கிறது.
ஏற்கனவே வாழ வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களின் தலையில் சுங்க கட்டண உயர்வு மூலம் கூடுதல் சுமையை மத்திய அரசு இறக்கி வைத்திருக்கிறது. காலாவதியான பல சுங்கச்சாவடிகளில் இன்னும் சுங்க கட்டண வசூலை நிறுத்தாமல் தொடர்ந்து வசூலித்து வருவது ஏற்புடையதல்ல.
சுங்க கட்டணத்துக்கான காரணம் கந்துவட்டியைவிட படுமோசமானது.. ராமதாஸ் கடும் கண்டனம்
மத்திய அரசால் வேதனை
லாரி தொழில் பல்வேறு பிரச்சினைகளால் நலிவடைந்து வரும் சூழ்நிலையில் இந்த சுங்க கட்டண உயர்வு மேலும் பாதிப்பையும், சிக்கலையும் உருவாக்கும். இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் சூழலில் மக்களின் கைகளில் இருக்கும் கொஞ்சநஞ்ச பணத்தையும் கட்டண உயர்வு என்ற போர்வையில் மத்திய அரசு பிடுங்கி கொள்ள நினைப்பது வேதனையளிக்கிறது.
தொழில்கள் முடங்கும் அபாயம்
இந்தியா முழுவதும் உள்ள சிறு, குறு தொழில்கள் மட்டுமல்ல பெரிய நிறுவனங்களும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இலட்சக்கணக்கானோர் வேலையை இழந்து நிர்கதியாய் நிற்பதற்கு மத்திய அரசு தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
வேலையிழப்புகளே அதிகம்
வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் வேலையிழப்புகளை தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டு தொழில் முனைவோர்களின் பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன.
கட்டண உயர்வை திரும்ப பெறுக
தற்போது வெளிநாடு முதலீடுகளை ஈர்க்கிறோம் என்று சொல்வதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. எனவே இந்த கட்டண உயர்வு அனைத்துதரப்பு மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கி வருவதை மத்திய அரசு புரிந்துக்கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் அமல்படுத்திய சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு ஈஸ்வரவன் தெரிவித்துள்ளார்.