40 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு... தயாராகும் திமுக தேர்தல் அறிக்கை.. உறுதி கூறிய கே.என்.நேரு..!
சென்னை: தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மெகா திட்டம் ஒன்றை இப்போதே தயார் செய்துள்ளது திமுக.
அந்தவகையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த வாக்குறுதி திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறக் கூடும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் 40 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உறுதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தடுமாறுகிறதா அதிமுக.. திமுக மீது முதல்வர் ஆவேசம்.. ராஜ்யசபாவில் மத்திய அரசு மீது பாய்ச்சல்.. ஏன்?
இளைஞர்கள்
தமிழகத்தில் கல்லூரி படிப்பை முடித்த பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வரும் சூழலில், அவர்களை மையமாக வைத்து திமுக தேர்தல் அறிக்கையில் அவர்களுக்கான வாக்குறுதி இடம்பெற உள்ளது. அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அதற்கான செயல்திட்டம் ஒன்றை இப்போதே ஸ்டாலின் தயார் செய்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இளைஞர்கள் ஆதரவு
வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்கள் ஆதரவை முழுமையாக பெறுவதற்காக இன்னும் சில வாக்குறுதிகளும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர் சேர முடியாத வகையில் நடவடிக்கை எடுப்பது, அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்களை மாவட்டந்தோறும் நடத்துவது என்பன உள்ளிட்ட இன்னும் பல வாக்குறுதிகளை திமுக அளிக்க இருக்கிறது.
40 லட்சம் இளைஞர்கள்
இதனிடையே இதனை உறுதிசெய்யும் வகையில் திருச்சியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 40 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என உறுதி கூறியுள்ளார். இதனை தேர்தலின் போது ஸ்டாலின் தேர்தல் அறிக்கையாகவே முறைப்படி வெளியிடுவார் என்றும் அவரை முதலமைச்சராக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பரப்புரை
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை மையமாக வைத்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைதளங்களில் தங்கள் பரப்புரையை தொடங்கிவிட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு பற்றிய தரவுகளை வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அதிமுக ஐ.டி.விங் அணி.