தொடரும் திமுக உட்கட்சி மோதல்... பல மாவட்டங்களில் பஞ்சாயத்து பேசும் கே.என்.நேரு
சென்னை: திமுகவில் பல மாவட்டங்களில் உட்கட்சி மோதல் தீவிரம் அடைந்துள்ளதால் அதனை பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்நேரு.
கரூர், கிருஷ்ணகிரி, நெல்லை, தூத்துக்குடி, நாமக்கல் மேற்கு என பல இடங்களில் மாவட்டச் செயலாளர்களுக்கும் அவர்களது எதிர் கோஷ்டியினருக்கும் பனிப்போர் நடைபெற்ற வண்ணம் உள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தும் விதமாக கே.என்.நேரு சமரச பேச்சுவார்த்தை நடத்த சுற்றி சுழன்று வருகிறார்.
அடுத்த அஸ்திரத்தை எடுத்த திமுக.. அடிமட்ட அளவில் வேட்பாளர்களுக்கு தேடுதல் வேட்டை.. கிலியில்
கருத்து வேறுபாடு
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ளதால் அது தொடர்பான பணிகளில் திமுக முழு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஒரு சில இடங்களில் மாவட்டச் செயலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஏற்பட்டுள்ள லடாய் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக இப்போதே அதனை சுமூகமாக பேசி தீர்வு காண வேண்டும் என நினைக்கிறது திமுக தலைமை. இதன் காரணமாக திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பிரச்சனைக்குரிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பஞ்சாயத்து பேசி வருகிறார்.
அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கட்டுக்கட்டாக அண்ணா அறிவாலயத்துக்கு புகார்கள் குவிந்ததால் அது தொடர்பாக விசாரிக்குமாறு மு.க.ஸ்டாலின் நேருவை கேட்டுக்கொண்டார். இதையடுத்து லாக்டவுனுக்கு மத்தியிலும் காரை எடுத்துக்கொண்டு தூத்துக்குடி சென்ற கே.என்.நேரு, அங்குள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து பஞ்சாயத்து செய்துள்ளார். சுமார் 7 மணி நேரமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாம்.
மாவட்டச் செயலாளர்
இதேபோல் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப்க்கும் மக்களவை உறுப்பினர் ஞனதிரவியத்துக்கும் தொடர்ந்து பனிப்போர் நீடித்து வந்த நிலையில் அது குறித்தும் நேரு விசாரணை நடத்தியிருக்கிறார். குற்றாலத்தில் உள்ள தனது நண்பர் பங்களாவில் வைத்து இந்த பஞ்சாயத்தை நடத்தியிருக்கிறார் நேரு. ஆனால் அங்கு இன்னும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான மூர்த்தி மீது அதிருப்தி கொண்ட பலர் அவரது செயல்பாடுகள் பற்றி தலைமைக்கும்,நேருவுக்கும் புகார் அனுப்பியுள்ளனர். பள்ளிப்பாளையம், மல்லசமுத்திரம் ஒன்றியங்களில் இருந்து பெருந்திரளானோர் மூர்த்தியின் செயல்பாடுகள் பிடிக்காமல் அதிமுக, பாஜகவுக்கு தாவி வருகின்றனர். இதற்கு சற்றும் குறையாமல் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திலும் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமாகும் படலம் நடைபெற்றுள்ளது. சிறுபான்மை பிரிவு மாவட்ட நிர்வாகி முனீர் அகமது, இலக்கிய அணி நிர்வாகியும் நாவிதர் நலச்சங்க தலைவருமான ஆனந்தன் ஆகியோர் 200 பேர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
தீராத தலைவலி
இன்னும் கிருஷ்ணகிரி மேற்கு, நாமக்கல் மேற்கு மாவட்ட விவகாரங்கள் தொடர்பாக நேரு விசாரணை நடத்தவில்லை. இதனிடையே மற்ற இடங்களை காட்டிலும் நேருவுக்கு பெரிய தலைவலியாக உருவெடுத்திருப்பது அவரது அருகாமை மாவட்டமான கரூர் தான். இங்கு ஏற்கனவே அவர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக இருக்குமாறு எடுத்துக்கூறியும் அதனை அம்மாவட்ட நிர்வாகிகள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. அதுவும் குறிப்பாக குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஒன்றியங்களில் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜிக்கு எதிர்ப்பு வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.