மொட்டை மாடியில் கத்திக் குத்து.. ரத்த வெள்ளத்தில் மிதந்த 10ம் வகுப்பு மாணவன்.. சென்னையில் பரபரப்பு
சென்னையில் 10-ம் வகுப்பு மாணவனுக்கு கத்தி குத்து விழுந்துள்ளது.
சென்னை: வீட்டின் மொட்டை மாடியில் பத்தாம் வகுப்பு மாணவனை மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கத்தி குத்து காயங்களுடன் மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் வேணு. கட்டிடத் தொழிலாளி. இவரது மகன் பாபு. 15 வயதாகிறது. அயப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று ஸ்பெஷல் கிளாஸ் முடித்துவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றிருக்கிறார் அப்போது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்து மர்ம நபர்கள் 2 பேர் இந்த மாடிக்கு எகிறி குதித்து வந்தனர்.
16 இடங்களில் குத்து
அங்கு நின்று கொண்டிருந்த பாபுவை திடீரென சரமாரியாக கத்தியால் 16 இடங்களில் குத்தினார்கள். இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய பாபுவின் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அங்கு குடியிருக்கும் எல்லோருமே மொட்டை மாடிக்கு வந்தனர்.
ரத்த வெள்ளம்
அப்போது அங்கு பாபு ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பாபுவை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் பாபுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சிசிடிவி கேமரா
மர்மநபர்கள் யார் என தெரியவில்லை. ஆனால் அவர்கள் வந்து போனது, அந்த தெருவின் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அவர்களின் முகமும் நன்றாக பளிச்சென காமிராவில் தெரிகிறது. இந்த காட்சியினை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
காதல் பிரச்சனையா?
10-ம் வகுப்பு மாணவன் மீது இவ்வளவு கொலை வெறியா என அதிர்ச்சியாக உள்ளது. கொலைக்கு காரணம் முன்விரோதமா அல்லது ஏதேனும் காதல் பிரச்சினையா என்றெல்லாம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.