கொடநாடு வழக்கில் திருப்பம்.. சாட்சியங்கள் கலைக்கப்பட்டது அம்பலம்.. கனகராஜ் சகோதரர் உட்பட 2 பேர் கைது
சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் புதிய திருப்பமாக, சாட்சியங்களை கலைத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நள்ளிரவில் ஒரு மர்ம கும்பல் அங்கே புகுந்து காவலாளி ஓம் பகதூர் என்பவரை கொலை செய்துவிட்டு எஸ்டேட் உள்ளே இருந்த பல பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.
இந்த சம்பவத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்ட 11 பேருக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த கனகராஜ் தேடப்பட்டு வந்தா.
6 கப்பல்கள்...இலங்கையில் இந்திய கடற்படை வீரர்கள் 4 நாட்கள் பயிற்சி!
பெங்களூர் பெண்மணி
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒரு கார் மோதி உயிரிழந்தார். இந்த கார் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட பெங்களூரில் வசிக்கும் ஒரு பெண்மணிக்கு சொந்தமானது. அவரது கணவர் ஏற்கனவே, உயிரிழந்த நிலையில், மாமியார், குழந்தைகள் உள்ளிட்ட தனது குடும்பத்தினரோடு அவர் காரில் பயணித்தபோதுதான் அதில் சிக்கி கனகராஜ் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
ஆதாரங்கள்
இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்த நிலையில் திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு விசாரணை வேகம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக கூறிய காவல்துறையினர், மீண்டும் கொடநாடு எஸ்டேட் வழக்கை விசாரிப்பதற்கு முடிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
2 பேர் கைது
நீதிமன்றமும் இதற்கு அனுமதி வழங்கியது. இதுவரை 34 பேரிடம் கூடுதல் விசாரணை நடைபெற்றுள்ளது. முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயான் உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடைபெற்றது. சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில்தான் கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.
திடீர் திருப்பம்
அவர்களை போலீசார் உதகை மாவட்டத்திற்கு அழைத்து வந்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவருக்கும், நவம்பர் 8ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து கூடலூர் கிளை சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். கனகராஜ் சகோதரர் தனபால், தனது சகோதரர் மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து கூறி வந்தவர் ஆகும். அவர் சாட்சியங்களை கலைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கைதான இருவரும் கனகராஜ் மரண வழக்கில், செல்போன்கள் உள்ளிட்ட ஆதாரங்களை அழித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மர்மங்கள்
கனகராஜ் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறுவது உண்மையாக இருந்தால், அவர் கொலை செய்யப்பட்டாரா, எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது.