கொடநாடு .. சயனை அப்ரூவராக்கி விசாரித்தால் உண்மை வெளி வரும்: ஆ.ராசா
சென்னை: கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை மற்றும் அதன் பிறகு நடைபெற்ற சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்தார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை செய்தியாளர்களிடம் ஆ.ராசா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கோடநாடு எஸ்டேட் என்பது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மற்றொரு தலைமைச் செயலகம் போல மாற்றப்பட்டது. இதற்காக மலையடிவாரத்திலுள்ள மின் நிலையத்திலிருந்து, தனியாக கேபிள் மற்றும் மின்சார கம்பங்கள் அமைக்கப்பட்டு கொடநாடு எஸ்டேட்டுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டது.
ஆனால், கொள்ளை மற்றும் காவலாளி கொலை நடைபெற்றபோது அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு போலீசார் கூட அப்போது, அந்த பகுதியில் கிடையாது. 27 சிசிடிவி கேமராக்களும் இயங்கவில்லை. இவையெல்லாம் வெளியிலிருந்து யாரும் செய்யக்கூடிய வேலை கிடையாது. நீங்களோ நானோ இதையெல்லாம் செய்துவிடமுடியுமா?
திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட செயல்கள் இவை. கொள்ளையில் ஈடுபட்ட, சயன் என்பவர் அளித்த பேட்டியில், இந்த கொள்ளை எதற்காக மேற்கொள்ளப்பட்டது? யாருக்காக மேற்கொள்ளப்பட்டது? என்றும் கூறியுள்ளார்.
இந்த கொலையில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து மர்மமாக உயிரிழந்துள்ளனர். இதுபோல சந்தேகத்திற்கு இடமாக அனைத்தும் நடந்துள்ளது. இவை அனைத்தையும் கோர்வையாக பார்த்தாலே இதன் பின்னணியில் யார் இருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும். எனவே குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, சயனை, அப்ரூவராக மாற்றி, காவல்துறை அவரிடம் வாக்குமூலம் பெற வேண்டும்.
இந்த கூட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை காவல்துறை வெளிக்கொண்டுவரவேண்டும். ஒருவேளை விசாரணை தவறாக சென்றால், அப்போது நீதிமன்றத்திற்கு செல்லலாமா அல்லது, சிபிஐ விசாரணையை கோரலாமா என்ற அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக பரிசீலிக்கும்.
புலன் விசாரணை செய்து ஆவணப் படம் வெளியிட்ட, தெகல்கா முன்னாள் ஆசிரியருக்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதற்கு முன்பு திமுகவுடன் ஏதேனும் தொடர்பு இருந்ததாக ஆதாரம் ஏதும் வெளியாகி உள்ளதா? அப்படி இருக்கும்போது இந்த குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர குற்றச்சாட்டின் பின்னணியில் யார் உள்ளார் என்று பார்க்கத் தேவை கிடையாது.
ஒரு பிரதான எதிர்க்கட்சியாக, குற்றவாளிகள் முகத்திரையை கிழிக்க வேண்டிய கடமை திமுகவுக்கு உள்ளது. எனக்கு எதிராக 2ஜி வழக்கில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. நான் அதை சட்டப்படி தான் எதிர்கொண்டு விடுதலையானேன். அதேபோல குற்றம் நடக்கவில்லை என்றால், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சட்டப்படி எதிர்கொண்டு சந்தேகத்தை தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உடனிருந்தார்.