கொடநாடு மர்ம மரணம்.. சயான் & மனோஜிடம் 7 மணி நேரமாக விசாரணை.. துருவி துருவி கேள்வி!
கொடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
சென்னை: கொடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
கொடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் தமிழகத்தின் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. இதில் அடுத்தடுத்த அதிரடி தகவல்கள் வெளியாகி வருகிறது.
மூன்று நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம மரணங்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த சில விவரங்களை வெளியிட்டார். இதுகுறித்து ஆவணப்படமும் அவர் வெளியிட்டார்.
தேடுதல் வேட்டை
இந்த விவகாரத்தில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று முதல் நாளே இதற்கான தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியது. இந்த நிலையில் நேற்றுதான் போலீசார் இவர்களை கைது செய்தனர். டெல்லியில் இவர்கள் தமிழக போலீசார் கைது செய்யப்பட்டனர்.
தனிப்படை கைது
மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் அன்பு,துணை ஆணையர் செந்தில் ஆகியோர் கொண்ட தனிப்படை இவர்களை கைது செய்தது. இந்த வீடியோவை வெளியிட்ட மேத்யூஸ் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வருகிறது. மேத்யூஸ் இன்று கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
தொடர் விசாரணை
கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். சயான் & மனோஜிடம் மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் செந்தில் 7 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் மேத்யூஸ் எடுத்த டாக்குமெண்டரி குறித்தே அதிக கேள்விகள் எழுப்பியதாக கூறப்படுகிறது.
என்ன கேள்விகள்
மேத்யூஸ் எடுத்த டாக்குமெண்டரி, எப்படி எடுக்கப்பட்டது, யார் எடுக்க உதவியது, தமிழகத்தில் இந்த டாக்குமெண்டரி எடுக்க உதவியவர்கள் யார் என்பது குறித்த கேள்விகள் எழுப்பியதாக தகவல்கள் வருகிறது. இந்த ஆதாரங்களை வைத்து மேத்யூஸ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்றும் கூறுகிறார்கள். இதனால் இந்த விசாரணை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.