கொடநாடு விவகாரம்: முதல்வர் உடனே பதவி விலக வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை!
கொடநாடு விவகாரத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: கொடநாடு விவகாரத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம மரணங்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார். அவர் இதில் தமிழக முதல்வரை நேரடியாக குற்றஞ்சாட்டினார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், கொடநாடு விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். நேர்மையான ஐஜி தலைமையில் புலனாய்வு குழு அமைக்க வேண்டும். இதற்காக தனி குழு அமைக்க வேண்டும்.
தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும். முதல்வர் பதவி விலகினால்தான் நேர்மையான விசாரணை நடக்கும். இதற்கு பின் எடப்பாடி பழனிச்சாமி தான் இருந்தார். வெளிப்படையாக அது எல்லோருக்கும் தெரியும்
கனகராஜ் மரணத்தை விபத்து என்று கூறி மறைக்க பார்க்கிறார்கள். கனகராஜ் விபத்தில் இறக்கவில்லை. அவர் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. இதை தனியாக விசாரிக்க வேண்டும்.
இந்த வழக்கில் தற்போது ஆதாரங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது. இதனால்தான் சயனையும், மனோஜையும் கைது செய்துள்ளனர். கொடநாடு அலுவலகம் என்பது தனியார் இடமாக இல்லை: அது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகமாக செயல்பட்டது.
அதனால் அங்கு ஆவணங்கள் எதனால் திருடப்பட்டது என்று விசாரிக்க வேண்டும்.இது அனைத்திற்கும் பொறுப்பேற்ற முதல்வர் பதவியில் இருந்து பழனிச்சாமி பதவில் விலக வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.