கொடநாடு கொலை வழக்கு: சயான் மனோஜுக்கு ஜாமீன் தர காவல்துறை தரப்பு எதிர்ப்பு
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிறையில் உள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிறையில் உள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை ஜாமீனில் விடுவிக்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து இருவரையும் ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு உள்ளே நுழைந்த மர்ம கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி காவல் நிலையத்தினர் சயான், மனோஜ் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சயான், மனோஜ் ஆகியோர் ஏற்கனவே ஜாமீன் பெற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் மேத்யூ சாமுவேல் உடன் சேர்ந்து முதல்வர் பழனிசாமிக்கு எதிராக பேட்டியளித்து கலவரத்தை தூண்டுகிறார் என காவல்துறை தெரிவித்து ஜாமீனை ரத்து செய்ய வைத்து, மீண்டும் இருவரையும் சிறையில் அடைத்தது.
மீண்டும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் கீழ்மை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.
தேசிய கொடி அவமதிப்பு வழக்கு - மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் எஸ் வி சேகர் மீண்டும் ஆஜர்
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு சாட்சிகளை மிரட்டியுள்ள இவர்களை ஜாமீன் விடுவித்தால் அரசுத் தரப்பின் மற்ற சாட்சிகளையும் மிரட்டக் கூடும் எனவும் தெரிவித்தார். தற்போது நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதாகவும் மூன்று மாதத்தில் வழக்கு விசாரித்து முடிக்கப்பட உள்ள நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டியதற்கான அவசியம் ஏதுமில்லை என வாதிட்டார்.
சயான், மனோஜ் தரப்பு மற்றும் காவல்துறை தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர் சுப்பிரமணியன் இன்று இருவரையும் ஜாமீனில் விடுவிக்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.