சுற்று சூழல் வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழகத்தில் கோலப் போராட்டம் #ScrapEIA2020
சென்னை: சுற்று சூழல் வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழகத்தில் இன்று பல இடங்களில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் சுற்று சூழல் வரைவு அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த அறிக்கை மீது பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஜூன் 30-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
பின்னர் இது ஆகஸ்ட் 12-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை காலநிலை மேம்பாட்டுக் குழுவின் சார்பாக, இந்த வரைவு அறிக்கைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வீடுகளில் கோலம் வரைய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் பல இடங்களில் #ScrapEIA2020, வேண்டாம் EIA2020 போன்ற வாசகங்களுடன் கோலங்கள் பதிவிடப்பட்டன. சமூக வலைதளங்களிலும் இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு டிரெண்டிங்கானது.
சுற்றுச் சூழல் வரைவு எதிர்ப்புக்கான கோலப் போராட்டம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, புதிய சுற்றுச்சூழல் கொள்கை வரைவு,சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குகிறது.மனிதர்கள் நலனை விலையாக கொடுத்து வளர்ச்சி பற்றி பேசுகிறது.நாடு முழுக்க கோலங்கள் மூலம் இக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. வரையப்பட்ட சில கோலங்கள் என பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களின் போது இதேபோல் வீடுகள் தோறும் பொதுமக்கள் கோலங்கள் போடும் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அப்படி கோலம் போட்டவர்கள் பல இடங்களில் கைதும் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.