சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் பாஜகவில் சேர்ந்துவிட்டு பெரியாரிஸ்ட் என சொல்லாதீங்க-கொளத்தூர் மணி
சென்னை: சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டு தன்னை பெரியாரிஸ்ட் என நடிகை குஷ்பு சொல்ல வேண்டாம் என்று திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கொளத்தூர் மணி கூறியுள்ளதாவது: அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கும் குஷ்பு அவர்களுடைய நேர்காணலில் தன்னை ஒரு பெரியாரிஸ்ட் என்கிறார். நேர்காணல் கண்டவர் ஒரு கேள்வியை முன்வைக்கிறார்.. நீங்கள் பெண்ணுரிமைவாதி என்று சொல்லிக் கொள்ளுங்கள்? ஏன் பெரியாரிஸ்ட் என்று சொல்கிறீர்கள் என கேட்கிறார்.
உங்களுக்கு தரப்பட்ட மரியாதை நினைவிருக்கிறதா குஷ்பு? தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி கடும் பதிலடி
காஷ்மீர் சிறுமி ஆசிபா
அப்போது, பெரியாரின் கடவுள் மறுப்பு போன்ற எல்லா கருத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார். பெரியாரின் கடவுள் மறுப்பை எல்லாம் விட்டுவிடுங்கள்.. பெண்ணுரிமைவாதியாக சொல்லுங்கள்.. காஷ்மீர் மாநிலத்தில் ஆசிபா என்ற சிறுமியை இந்து மதத்தை காப்பாற்றுவதாக சொல்லுகிற இந்த பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள், இந்து கோவிலுக்குள் சில நாட்கள் வைத்து தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்து புதைத்தனர்.
ஹத்ராஸ் சம்பவம்
இப்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கிற உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு சிதைத்த பெண்ணை காவல்துறையினரே கொண்டுபோய் எரிக்கின்றனர். இந்த கட்சியில்தான் போய் குஷ்பு பெண்ணுரிமை பற்றி பேச போகிறாரா குஷ்பு? என தெரியவில்லை.
இடஒதுக்கீட்டை மறுக்கும் பாஜக
அடுத்த பெரியாரின் கொள்கை சமூக நீதிதான். வரலாற்று காலத்தில் இருந்து வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு - இந்துமதத்தில்- இந்தியாவில் இருக்கிற மக்களுக்கு செய்கிற ஏற்பாடு என்பதுதான் சமூக நீதி. 25 விழுக்காடு இருக்கிற மக்களுக்கு 15% இடஒதுக்கீடுதான் மத்திய அரசு கொடுத்திருக்கிறது. ஆனால் 15% இருக்கிற உயர்ஜாதியினருக்கு- உயர் ஜாதி ஏழைகளுக்கு என்று 10% கொடுத்திருக்கிறார்கள். எல்லா ஏழைகளுக்கும் இல்லை. இது சமூக நீதியா? தமிழக அரசு தன் வரிப்பணத்தில் தன் மக்களுக்கு கட்டிய மருத்துவ கல்லூரிகளில் கூட மத்திய அரசு இடஒதுக்கீடு தர மறுக்கிறது. இந்த கட்சியில் போய்தான் சமூக நீதியை காப்பாற்றப் போகிறார்களா?
பாஜக ஆட்சிகளில் ஜாதிய ஒடுக்குமுறை
பெரியாரின் முதன்மை கொள்கை ஜாதி ஒழிப்பு. ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆளுகிற மாநிலங்களில் மட்டும் தெருவில் நடந்ததற்காக, தண்ணீர் குழாயில் தண்ணீர் எடுக்க வந்ததற்காக, செருப்பு போட்டதற்காக, தொட்டு விட்டதற்காக கொன்று அழிக்கப்படுவதும் அவர்களை அவமானப்படுத்துவதும் காணொலி காட்சிகளாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியாரின் பெண்ணுரிமைக்கு எதிரான கட்சி- பெரியாரின் ஜாதி ஒழிப்புக்கு எதிரான கட்சி- பெரியாரின் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கிற கட்சியில் சேர்ந்து கொண்டு பெரியாரிஸ்ட் என்று ஏன் சொல்ல வேண்டும்? அருள்கூர்ந்து அப்படி சொல்லாதீர்கள்.
இனி சொல்லாதீர்
பெண்ணுரிமை என்று பேசினால் கூட இவர்கள் அமைக்கப் போகிற ராமராஜ்யத்தின் கடவுள் ராமன். நேரடியாக கடவுளை வணங்கியதால் சம்பூகனை வெட்டிக் கொன்றான். இதுதான் ராமராஜ்ஜியம். தாழ்த்தபட்டோர் பிற்படுத்தப்பட்டோர் நேரடியாக கடவுளை கும்பிட முடியாது என்பதுதான் ராமராஜ்யம். கருவுற்ற மனைவி மீது சிறு சந்தேகம் வந்தவுடன் காட்டுக்குப் புறப்பட்டான் ராமன். இதுதான் பெண்ணுரிமையா? ஜாதி ஒழிப்பா? இப்படியான ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு இனிமேலாவது பெரியாரிஸ்ட் என்று சொல்லாதீர்கள் என்பதுதான் அன்பு வேண்டுகோள். இவ்வாறு கொளத்தூர் மணி கூறியுள்ளார்.