அவுட்லுக் இல்லை.. 1971ல் வெளியான துக்ளக்கைத்தானே ரஜினி காட்டியிருக்கணும்.. கொளத்தூர் மணி!
Recommended Video
சென்னை: 1971-ஆம் ஆண்டு சேலம் பேரணியில் நடந்த விஷயம் வெளிவந்த துக்ளக் ஏட்டை காண்பிக்காமல் அவுட்லுக்கின் ஜெராக்ஸை ரஜினி காட்டுவது ஏன் என திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்தார்.
துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த விழாவில் ரஜினி பேசுகையில் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் ராமர், சீதையின் சிலைகள் உடையில்லாமல் செருப்பு மாலை அணிவித்து கொண்டு செல்லப்பட்டது.
இதை துக்ளக் பத்திரிகையில் இதழின் ஆசிரியர் சோ தைரியமாக வெளியிட்டார். அந்த புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன என்றார் ரஜினி.
மன்னிப்பு
ரஜினியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மிகவும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் என்பதால் வரலாற்றை தவறாக கூறிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் கழக அமைப்புகள் கோரின.
கற்பனை
இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது கையில் ஒரு பத்திரிகையை காண்பித்த ரஜினிகாந்த், நான் எதையும் கற்பனையாக பேசவில்லை. நான் பேசிய நிகழ்வு நடந்தது.
ஜெராக்ஸ்
எனவே நான் மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தமும் தெரிவிக்கமாட்டேன் என்றார். இதுகுறித்து திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில் ரஜினி துக்ளக் ஏட்டை காண்பித்திருக்க வேண்டுமே தவிர ஏதோ ஜெராக்ஸை காட்டக் கூடாது.
துக்ளக்
தான் நாணயமானவன் என்பதை நிரூபிக்க ரஜினி துக்ளக் ஏட்டை காண்பிக்க வேண்டும். உண்மையில் தான் இதை விளக்க வேண்டும் என்றால் அவர் கூறிய துக்ளக் நாளிதழை காட்டியிருக்க வேண்டும். 1971-ஆம் ஆண்டு வெளியான துக்ளக் ஏடு இவருக்கு கிடைக்காதா என்ன.
ஆணவம்
இவர்தான் துக்ளக் நிர்வாகத்துடன் நெருக்கமாக இருக்கிறார். எச் ராஜா, எஸ்வி சேகர் இவர்கள் வரிசையில் ரஜினிகாந்தும் மன்னிப்பு கேட்க மாட்டார் என கூறுகிறார். ஆணவத்திற்கான எதிர் நடவடிக்கைகளை நாம் பார்க்கலாம். ரஜினி இப்படி நடந்து கொள்வது கேவலமான ஒன்றாகத்தான் நாங்கள் பார்க்கிறோம் என்றார் கொளத்தூர் மணி.
பாஜக
ரஜினிகாந்த் விளக்கத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு ட்விட்டரில் கூறுகையில் தந்தை பெரியார் தமிழ் மண்ணின் சமூகநீதி அடையாளம். பெரியார் என்கிற அடையாளத்தை சிதைப்பது தான் பாஜகவின் செயல்திட்டம். பெரியார் என்கிற அடையாளத்தை சிதைக்க ரஜினியை பேச வைக்கிறது பாஜக என்றார் வன்னி அரசு.