சூடு போட்டுக்காதீங்க ரஜினி.. எடப்பாடியாருடன் எப்படி தன்னை ஒப்பிடலாம்.. போட்டு தாக்கும் ஈஸ்வரன்
நடிகர் ரஜினியின் பேச்சுக்கு கொங்கு ஈஸ்வரன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்
Recommended Video
சென்னை: "கிராமத்திலிருந்து திடீரென்று கூப்பிட்டு எடப்பாடியாரை யாரும் முதல்வர் ஆக்கவில்லை.. அவருடன் தன்னை ரஜினி ஒப்பிட்டு கொள்ளக்கூடாது.. அதேபோல எம்ஜிஆரோடு ஒப்பிட்டுக் கொண்டு தானும் முதல்வர் ஆவேன் என்று ரஜினி நினைத்தால் தனக்குத்தானே சூடு போட்டுக்கொள்வார்.. அறியாமையின் அல்லது ஆணவத்தின் வெளிப்பாடு இது.. மக்கள் ஜாக்கிரதையா இருக்கணும்" என்று கொங்கு மண்டல ஈஸ்வரன் காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
நேற்று விழா ஒன்றில் பேசிய நடிகர் ரஜினி, 2 வருஷத்துக்கு முன்னாடி முதலமைச்சர் ஆவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 4 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று எல்லாருமே அன்னைக்கு சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது... நேற்று அதிசயம் நடந்தது... இன்றும் அதிசயம் நடக்கிறது... நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும்.." என்றார்.
ரஜினியின் இந்த பேச்சு வழக்கம்போல சர்ச்சை, சலசலப்பு, குழப்பம், சந்தேகங்களுக்கு உட்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது. ரஜினி எந்த அர்த்தத்தில் இதை பேசினார், ஏன் பேசினார் என்ற விவாதங்களும் எழுந்தபடியே உள்ளன.
முதல்வர் ஆவேன் என இபிஎஸ் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.. ரஜினிகாந்த் பரபர பேச்சு!
ஒப்பீடு
இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ரஜினியின் இந்த பேச்சுக்கு தன் கருத்தினை பதிவு செய்துள்ளார். அதில், "கிராமத்திலிருந்து திடீரென்று கூப்பிட்டு எடப்பாடியாரை முதல்வர் ஆக்கவில்லை.. அவருடன் தன்னை ரஜினி ஒப்பிட்டு கொள்ளக்கூடாது.. எம்ஜிஆரோடு ஒப்பிட்டுக் கொண்டு தானும் முதல்வர் ஆவேன் என்று ரஜினி நினைத்தால் தனக்குத்தானே சூடு போட்டுக்கொள்வார்.. மக்கள் ஜாக்கிரதையா இருக்கணும்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். கொங்கு மண்டல ஈஸ்வரனின் காட்டமான அறிக்கை இதுதான்:
அதிசயம் ஆகாது
"முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கனவிலும் முதல்வராக நினைக்கவில்லை என்று ரஜினிகாந்த் தன்னுடைய பேச்சில் சொல்லியிருக்கிறார். எதிர்பார்க்காமல் நடப்பதுதான் அதிசயம். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தான் முதல்வர் ஆவேன் என்ற எதிர்பார்ப்போடு நடக்குமென்று நினைப்பது அதிசயம் ஆகாது.
வெற்றிடம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திடீரென்று கிராமத்திலிருந்து அழைத்துவரப்பட்டு முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் அல்ல. அந்த இயக்கத்தின் கிளை செயலாளராக, ஒன்றிய செயலாளராக, மாவட்ட செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்து ஜெயலலிதாவிற்கு பிறகு அங்கு வெற்றிடம் ஏற்பட்ட போது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
சூடு போட்டு கொள்வார்
அவரோடு ரஜினிகாந்த் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளக்கூடாது. சில அறிவு ஜீவிகள் எம்ஜிஆரோடு ரஜினியை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். எம்ஜிஆர் முதலமைச்சர் ஆவதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றிக்கு காரணமாக இருந்தவர். அந்த கட்சியின் பொருளாளராக இருந்தவர். நடிப்பு ஒன்றால் மட்டுமே எம்ஜிஆர் முதலமைச்சரானவர் அல்ல. இப்படி எல்லாம் ஒப்பிட்டுக் கொண்டு ரஜினி தானும் முதல்வர் ஆவேன் என்று நினைத்தால் தனக்குத்தானே சூடு போட்டுக்கொள்வார்.
மோடி - ரஜினி
2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அன்றைய பிரதம வேட்பாளர் மோடி அவர்கள் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு ரஜினி ரசிகர்கள் ஆங்காங்கே மோடிக்கு ஆதரவாக பணியாற்ற வந்தார்கள். எந்தளவுக்கு அரசியல் ரீதியாக ஆதரவு இருந்தது என்பது அன்றைய தேர்தலில் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இரட்டை இலை
ரஜினியை சுற்றி இருக்கின்ற 10 பேர் தங்கள் சுயலாபத்திற்காக தமிழகமே ரஜினி பின்னால் நிற்பது போல ரஜினியை நம்ப வைக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடு தான் ரஜினியின் இந்த பேச்சு. அவருடைய இலக்கு எம்ஜிஆருடைய ஓட்டுக்களை பிரிப்பது. இரட்டை இலைக்கு விழுகின்ற வாக்குகளை ஒரு குறிப்பிட்ட சதவீதம் அவர் பிரிக்கலாம். தமிழக மக்கள் விழிப்புணர்வோடு ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம் இது" என்று தெரிவித்துள்ளார்.