6 மாதங்களாகியும் எம்.பி.களுக்கு டெல்லியில் வீடு இல்லை... கொங்கு ஈஸ்வரன் குற்றச்சாட்டு
சென்னை: மக்களவைத் தேர்தல் முடிந்து 6 மாதங்களாகியும் எம்.பி.களுக்கு டெல்லியில் இன்னும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை என கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், நவீன இந்தியாவில் மத்திய அரசின் வேகம் இதுதானா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
வேகம் இல்லை
2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை வீடுகள் தயாராகவில்லை. 2014 -லிலும் இதே நிலைமைதான் ஏற்பட்டு பல கோடி ரூபாய்களை ஓட்டல்களுக்கு அரசாங்கம் தாரைவார்த்தது. அதிகபட்ச வேகமாக மத்திய அரசு இயங்குகிறது என்று இந்திய மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள்.
மத்திய அரசு மீது புகார்
ஒரு தொழிற்சாலைக்கு அனுமதி என்றாலும், ஒரு கொள்கை முடிவு என்றாலும் மத்திய அரசு மிக வேகமாக இயங்குகிறது என்று ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகளை பார்க்க முடிகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட அனைத்து அமைச்சர்களுமே பொதுமக்களுடைய குறைகளை உடனே தீர்ப்பதற்கு ஆசைப்படுவது போல் தான் நம்பிக்கை கொடுக்கிறார்கள். ஆனால் செயல்படுத்துவதில் மிகப்பெரிய சுணக்கம் இருக்கின்றது.
மத்திய அரசுக்கு கேள்வி
டெல்லியில் மத்திய அரசு வேகமாக செயல்பட்டிருந்தால் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் இவ்வளவு தாமதமாக வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இந்தியாவினுடைய சட்டத்தை இயற்றும் வல்லமை படைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதனுடைய தேவைகள் எப்படி பூர்த்தி செய்யப்படும்.
இல்லம் ஒதுக்குக
நவம்பர் 18-ஆம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாவது இல்லங்களை ஒதுக்குவதற்கு சம்பந்தப்பட்ட அரசுத்துறை தயாராக வேண்டும். இதை ஒரு உதாரணமாக தான் சொல்ல விரும்புகிறோம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். மத்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.