ஸ்டாலினுக்கு கொங்கு ஈஸ்வரன் வாழ்த்து!
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைவதை தமிழகம் எதிர்பார்த்து காத்திருப்பதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதலாம் ஆண்டில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை குவித்துவிட்டு இரண்டாம் ஆண்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக அடியெடுத்து வைக்கும் அவர்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். முதலாம் ஆண்டில் ஈட்டிய வெற்றியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் பங்கு கொடுத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்ற ஆண்டு தலைவராக பொறுப்பேற்ற போது, "நான் கருணாநிதி அல்ல ஆனால் முயற்சிப்பதற்கான தைரியம் என்னிடத்தில் இருக்கிறது" என்று குறிப்பிட்டதை நினைவு கூற விரும்புகிறேன். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக கருணாநிதியைப் போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்து அடுத்தகட்ட போருக்கு களத்திலே முன்னேறி கொண்டிருக்கின்ற திமுக தலைவருக்கு வெற்றிவாகை சூடுவீர்கள் என்ற வாழ்த்துகளோடு, வெற்றிக்கு வெகுதூரமில்லை என்ற நம்பிக்கையோடு வாழ்த்து தெரிவிக்கிறேன்.
திமுக எம்பிக்களை அழைத்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் நடந்த திடீர் ஆலோசனை.. என்ன பேசினார்கள்?
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வியூகங்களை வகுத்து எதிர்பார்த்தது போல மிகப்பெரிய வெற்றியை பெற்று அடக்கத்தோடு அடுத்தகட்டத்தை நோக்கி பயணிப்பதை பெருமையோடு தமிழக மக்கள் பார்க்கிறார்கள். விவசாயமும், தொழில்துறையும் நலிவடைந்து தமிழகம் பொருளாதார சிக்கலில் இருக்கும் போது ஒரு வலிமையான அரசாங்கத்தை, தலைமையை தமிழகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற எங்களுடைய வாழ்த்துக்கள். இவ்வாறு ஈஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.