நடிகர் கருணாஸ் பொறுப்புடன் பேச வேண்டும்... பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது... கொங்கு ஈஸ்வரன் அறிவுரை
சென்னை: நடிகர் கருணாஸ் பொறுப்புள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினராக செயல்பட வேண்டுமென்றும் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது எனவும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது கருணாஸ் ஜாதிரீதியாக சுமத்திய குற்றச்சாட்டு தவறு என ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு... நடிகர் கார்த்தி சொன்னது கரெக்டு... கொங்கு ஈஸ்வரன் வரவேற்பு!
காவல் கண்காணிப்பாளர்
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கருணாஸ் அவர்கள் ஜாதி ரீதியான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். நண்பர் கருணாஸ் அவர்களுக்கு தெரியாதது அல்ல. அரசில் பணியாற்றுகின்ற ஐஏஎஸ் அதிகாரிகளும் ஐபிஎஸ் அதிகாரிகளும் ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதை மறுத்தால் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவது உறுதி. இதுதான் நடைமுறையாக நடந்து கொண்டிருக்கிறது.
ஆட்சி அதிகாரம்
நண்பர் கருணாஸ் அவர்களுடைய கூட்டணி கட்சியினுடைய ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகார மையத்தில் இருப்பவர்களை குற்றம் சாட்டுவதை ஏதோ காரணங்களுக்காக தவிர்த்து ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார். ஜாதி ரீதியாக சுமத்தப்பட்டு இருக்கின்ற அவருடைய குற்றச்சாட்டு முன்னுதாரணமாக ஆகிவிடும். இதுபோல குற்றச்சாட்டுகளை வைக்கும்போது பொதுவாக வைக்காமல் குறிப்பிட்ட தவறுகளை சுட்டிக்காட்டி வைத்தால் நன்றாக இருக்கும்.
உணர்ச்சிவசப்பட்டு
சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அவர்களும் உணர்ச்சிவயப்பட்டு பேசக்கூடியவர் தான். தமிழக முதலமைச்சர் மேல் குற்றச்சாட்டு வைத்து அவரை கொச்சைப்படுத்தி பேசிய போது காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது இந்த நேரத்தில் குறிப்பிடப்பட வேண்டியது. அதனால் வருகின்ற காலத்தில் இதுபோன்ற பொத்தாம் பொதுவான ஜாதி குற்றச்சாட்டுகளை தவிர்த்து செய்த தவறை வெளிப்படையாக சொன்னால் நன்றாக இருக்கும்.
பொறுப்புணர்வு தேவை
எல்லா சமூகங்களுக்கும் இன்றைக்கு அமைப்பு இருக்கிறது. எல்லாவற்றிலும் எழுச்சிமிகு இளைஞர்கள் அவரவர் சமூகத்திற்கு ஆதரவாக நிற்பவர்கள் உள்ளார்கள் என்பதை சமூக வலைதளங்களில் பார்த்தால் யார் வேண்டுமானாலும் தெரிந்துக் கொள்ளலாம். இரு ஜாதிகளுக்கு இடையே உள்ள பிரச்சினையாக இது மாறி விடக்கூடாது. ஜாதி கலவரங்கள் இப்படிப்பட்ட சிறு பொறியில் தான் ஆரம்பிக்கும் என்பதை உணர்ந்து பொறுப்புள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினராக செயல்பட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.