சீனப் பொருட்களுக்கு இந்தியா சந்தையை திறக்கக்கூடாது... கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தல்
Recommended Video
சென்னை: சீனப்பொருட்களுக்கு இந்தியா சந்தையை திறந்துவிடக்கூடாது என என்றும், அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தக இழப்பை இந்தியாவில் சரிகட்ட சீனா முயற்சிப்பதாகவும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் கொங்கு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்திற்கு வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்பதாகவும், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்து கொள்கின்ற நிகழ்வு வரவேற்புரியது எனவும் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு உலக வரைபடத்தில் மாமல்லபுரத்தை அடையாளம் காட்டக்கூடியதாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரம் இந்தச்சந்திப்பின் போது இந்தியா வெகு ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவுடன் வர்த்தக உறவில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்வதற்காக இந்தியாவுடன் உறவாட சீனா விரும்புவதாக தெரிவித்துள்ளார். நாளை நடைபெறும் சந்திப்பு, சீனாவில் உற்பத்தியாகும் பொருட்களை இந்தியாவில் விற்க வழிவகை செய்யுமானால், அது இந்திய உற்பத்தித்துறைக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி இருக்கும் இந்தியாவுக்கு மேலும் பாதிப்புகள் ஏற்படும் என்றும், அதனால் தான் சீன அதிபருடனான பேச்சுவார்த்தையின் போது இந்திய அரசு கவனமுடன் இருக்க வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். பாகிஸ்தான் பொருட்களுக்கு சீனாவில் வரியில்லை என அறிவித்திருப்பது, வர்த்தக ரீதியில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு என சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன அதிபர் நட்பு ரீதியாக இந்தியாவுக்கு வருவதை குறை சொல்லவில்லை என்றும், வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையை கவனமுடன் கையாள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.