கொரோனாவிலிருந்து தப்பிக்க இது தான் ஒரே வழி... கொங்கு ஈஸ்வரன் அரசுக்கு கூறும் முக்கிய யோசனை..!
சென்னை: உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதுதான் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க ஒரே வழி என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பணிகளை முன்னெடுக்க தமிழக சுகாதாரத்துறையில் தனிப்பிரிவை உருவாக்க வேண்டும் என அரசுக்கு அவர் முக்கிய யோசனை கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கொரோனா 2.0: உங்க வீட்டு குட்டீஸ்கள் மீது கவனம் - இந்த அறிகுறிகள் இருந்தால் செக் பண்ணுங்க
கொரோனா தொற்று
கொரோனா பெருந்தொற்றின் 2-ஆம் அலை மிக வேகமாக பரவுவதால் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. கொரோனா பரவலின் வேகத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறிக் கொண்டிருக்கிறது. முகக்கவசம் அணியாமல் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் வெளியில் நடமாடும் சிலருக்கு கொரோனா வருவது கிடையாது. ஆனால் முகக்கவசம் அணிந்து தகுந்த பாதுகாப்போடும், முன்னெச்சரிக்கையோடும் இருப்பவர்களுக்கு கொரோனா எப்படி வருகிறது என்று தெரியாமலேயே வந்துவிடுகிறது.
எப்படி பரவுகிறது?
கொரோனா ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் பாதையை சரியாக யாராலும் கணிக்கவே முடியவில்லை. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு முயற்சி எடுக்கிறதே தவிர கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எந்தவொரு முயற்சியும் இதுவரை எடுக்காமல் இருக்கிறது. ஒருபுறம் தடுப்பூசி இருந்தாலும் கூட மற்றொருபுறம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பையும், பாதிப்பையும் கட்டுப்படுத்த முடியும்.
ஆயுர்வேதா
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு கொரோனாவினால் பெரியளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. தொலைக்காட்சிகளில் கொரோனா தொற்று வந்துவிட்டால் என்னவாகும் என்பதையும், கொரோனா பரவல் பாதிப்பிலிருந்து தப்பிக்க வழியையும் சொல்கிறார்களே தவிர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. சித்தா மற்றும் ஆயுர்வேத முறைகளில் எந்தவொரு பக்கவிளைவும் இல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
நோய் எதிர்ப்பு சக்தி
ஆனால் அதற்கெல்லாம் எந்தவொரு முக்கியத்துவமும் கொடுக்காமல் தமிழக சுகாதாரத்துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது. கொரோனா பரவுவதை தடுக்க போடப்படும் கட்டுப்பாடுகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் தமிழக அரசு முனைப்பு காட்ட முன்வர வேண்டும். தமிழக சுகாதாரத்துறையில் தனிப்பிரிவை உருவாக்கி தேவையான நிதியை ஒதுக்கி உடனடியாக செயல்படுத்துவதன் மூலம் பெரும்பாலான மக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறிப்பிட்ட நாட்களில் அதிகரித்திட முடியும்.