திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து பழனி புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்: கொங்கு மக்கள் முன்னணி
பழனி, ஒட்டன்சத்திரம், தாராபுரம், மடத்துக்குளத்தை உள்ளடக்கி பழனி புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது.
சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து பழனி புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கொங்கு மக்கள் முன்னணி வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம் எழுதியுள்ள கடிதம்: தமிழ்நாட்டின் வருவாய் நிர்வாகத்தை செம்மைப்படுத்துவதற்கான மிக முக்கியமான கோரிக்கைகள் குறித்து, தமிழக முதலமைச்சராகிய தங்களின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கத்துடன் இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான பழனியை தலைமையிடமாகக் கொண்டு, பழனி, ஒட்டன்சத்திரம், தாராபுரம் மற்றும் மடத்துக்குளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது அந்த பகுதிகளில் வாழும் மக்களின் நியாயமான கோரிக்கையாகும். பழனியை மாவட்டத் தலைநகரமாக அறிவிக்கப்படுவதற்கான அனைத்துத் தகுதிகளும், வசதிகளும் பழனி நகரத்துக்கு உண்டு .
பழனி புதிய மாவட்டமா?..வெறும் மலைக்கோட்டையை வெச்சுகிட்டு நாங்க என்ன பண்றது.. குமுறும் திண்டுக்கல்!
உலகப் புகழ் பெற்ற பழனி முருகன் கோவில், ஆண்கள் அரசு கலைக்கல்லூரி, பெண்கள் அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் ஆகியவை பழனி நகரில் தான் அமைந்துள்ளது. ஒட்டன்சத்திரம், தாராபுரம், மடத்துக்குளம், கொடைக்கானல், பகுதிகளுக்கு பழனியே மையப் பகுதியாகும். குறைந்த தூரத்தில் பயணம் செய்யக்கூடிய இடமாகவும் அமைந்துள்ளது. பழனி நகரம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் சாலைவழியாகவும், தொடர்வண்டிப் பாதை வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது.
கேரளா,ஆந்திரா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் இருந்து பழனிக்கு தொடர்வண்டிகளும்,பேருந்துகளும், இயக்கப்படுகின்றன.
பழனி மாவட்டத் தலை நகரத்திற்கு தேவையான கூடுதல் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு தேவையான நிலங்கள் பழனியிலும்,அதன் புறநகர் பகுதிகளிலும் ஏராளமாக உள்ளன.பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பதற்கு இதைவிட தகுதிகள் தேவையில்லை.
திண்டுக்கல்லை பிரித்து உருவாகிறதா பழனி புதிய மாவட்டம்? என்னவாகும் வேடசந்தூர்? பரபரக்கும் விவாதம்!
பழனியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் இந்த கோரிக்கையை முன்வைத்து அறவழியில் போராடி வருகின்றனர். அதில் உள்ள நியாயத்தை தாங்களும் அறிந்திருப்பீர்கள். இந்த கோரிக்கையை அங்கீகரித்து 2021-ஆம் ஆண்டு பழனியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திண்டுக்கல் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப் படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதை நிறைவேற்றுவதற்கான சூழல் இப்போது அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் பழனி மட்டுமின்றி, சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் மக்கள்தொகை அதிகமாக இருக்கும் போது, அங்கு வளர்ச்சி சாத்தியமாகாது.
வளர்ச்சி என்பது பெரிய மாவட்டங்களைப் பிரித்து சிறிய மாவட்டங்களை உருவாக்குவது என்பது வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாட்டில் மொத்த மாவட்டங்கள்(13) மட்டுமே இருந்தன. இப்போது இரு மடங்கு கூடுதலாக (38) மாவட்டங்கள் உள்ளன. அதன் காரணமாக கட்டமைப்பு வசதிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் பழனி உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் போது மாவட்ட நிர்வாகம் மேம்படும், உள்கட்டமைப்பு, மேம்படுத்தப்படும் எனவே திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அரசு அமைக்க வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டங்களையும் பிரித்து,(12) லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அதில் பழனி உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சி.ஆறுமுகம் வலியுறுத்தி உள்ளார்.