ஆளாளுக்கு பதவி வாங்கிட்டாங்க.. மக்களைப் பத்தி கவலையே கிடையாது.. லிஸ்ட் போட்டு வெளுத்த ஈஸ்வரன்!
தமிழக பாஜக தோற்க என்ன காரணம் என்று கொங்கு மண்டல ஈஸ்வரன் விளக்கி உள்ளார்
சென்னை: "ஒவ்வொரு தமிழக பாஜக முக்கிய புள்ளிகளும் தங்களுக்கு என்ன பதவிகளை வாங்க முடியுமோ அதை மத்திய அரசிடமிருந்து வாங்கி கொண்டு ஒதுங்கி கொண்டார்களே தவிர மக்களை பற்றி யாருமே யோசிக்கவில்லை" என்று கொங்கு மண்டலம் ஈஸ்வரன் விமர்சித்துள்ளார்.
பாஜக ஏன் தமிழ்நாட்டில் தோற்று போனது என்பது குறித்து கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் விளக்கமாக கூறியுள்ளார். இது சம்பந்தமாக பாஜக தொண்டர்களிடமே நேரடியாக பேசினாராம். அதன் மூலம் பெறப்பட்ட கருத்துக்களை வைத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொல்லி இருப்பதன் சுருக்கம் இதுதான்:
"2014-ல் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய கூட கூட்டணி கூட்டத்தை கூட்ட பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மறுத்துவிட்டார். வாஜ்பாய் தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி இருந்த போது 5 ஆண்டுகள் எப்படி வளரும் வாய்ப்பை, தமிழக பாஜக தலைவர்கள் தவறவிட்டார்களோ அதைப்போலவே இந்த 5 ஆண்டுகளையும் பயன்படுத்தி கொள்ளாமல் தவறவிட்டார்கள்.
பாஜக கணக்கு
அதிமுக தொண்டர்களே விரும்பாத கூட்டணியாகதான் அமைத்தது. 2014-லிலே வளர்ச்சியை முன் வைத்து ஆட்சிக்கு வந்த பாஜக அதை முன்னெடுக்காமல் தமிழக பாஜக தலைவர்கள் மத ரீதியான கருத்துகளே தங்களை வளர்த்துவிடும் என்று தப்பு கணக்கு போட்டார்கள். கட்சி வளர்ச்சிக்கோ, தமிழகத்தின் வளர்ச்சிக்கோ பங்காற்ற தவறினார்கள். பாஜகவின் முன்னணி தலைவர்கள் சுயநலத்தோடு தங்களுடைய சொந்த இருப்பை வலுப்படுத்திக் கொள்ளத்தான் முயற்சித்தார்கள்.
பொன் ராதாகிருஷ்ணன்
போன முறை பொன்.ராதாகிருஷ்ணன் தன் தொகுதியிலே தான் மட்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கூட்டணி நகர்வுகளை பயன்படுத்தினார். திட்டமிட்டது போலவே பாஜகவில் அவர் மட்டும் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார். அத்தோடு தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதை கைவிட்டார். கன்னியாகுமரி தொகுதியிலே கூட கட்சியை கைவிட்டுவிட்டார் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டி உள்ளது.
மெத்தன போக்கு
பாஜகவின் முன்னணி தலைவர்களும் அவரவர் மத்திய அரசிடம் தங்களுக்கு என்று என்ன பதவிகளை பெற முடியுமோ அதை பெற்றுக்கொண்டு ஒதுங்கி கொண்டார்கள். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தங்களை வளர்த்து கொள்வதற்காக பதவிகளை பெற்றார்களே தவிர அந்த பதவிகளை பொதுமக்களின் நலனுக்காகவோ, தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காகவோ பயன்படுத்தவில்லை. மொத்தத்தில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காணாமல் போனதற்கு தமிழக பாஜக தலைவர்களுடைய மெத்தனப்போக்கும், மக்கள் விரும்பாத எதிர்கருத்துகளும் தான் காரணம்.
செயல்பாடுகள்
தமிழகத்தின் வளர்ச்சிக்காக வெற்றி பெற்று இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக பாஜக தலைமை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதன் மூலம் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கவில்லை, மாறாக மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறது என்று செயல்பாடுகளின் மூலமாக தமிழக மக்களுக்கு உணர வைக்க வேண்டும்" என்று காட்டமாக சொல்லி, பாஜக தலைவர்கள் வகிக்கும் பொறுப்புகளை பட்டியல் போட்டுள்ளார். அவை இதுதான்:
1. தமிழிசை சௌந்தரராஜன் - இயக்குநர், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL), இந்திய அரசு நிறுவனம். 2. ஹெச்.ராஜா - இந்திய இரயில்வே பயணிகள் வசதிகள் மேம்பாட்டு குழு தலைவர்.
3. சி.பி.ராதாகிருஷ்ணன் - இந்திய கயிறு வாரிய தலைவர் (தலைமை அலுவலகம் கேரளாவில்).
4. வானதி சீனிவாசன் - இயக்குநர், சென்னை உர தொழிற்சாலை (MFL), இந்திய அரசு நிறுவனம்.
5. லலிதா குமாரமங்கலம் - தலைவர், தேசிய மகளிர் ஆணையம் (NCW).
6. குருமூர்த்தி - இயக்குநர், ரிசர்வ் வங்கி (RBI).
7. முனைவரி பேகம் - மத்திய முஸ்லிம் மகளிர் நல வாரியம்.
8. எல்.முருகன் - துணைத்தலைவர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (NCSC).
9. ஆதவன் & கருப்பு முருகானந்தம் - அறங்காவலர்கள், சென்னை துறைமுகம், இந்திய அரசு நிறுவனம்.
10. எஸ்.வி.சேகர் - மத்திய திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர்.