'முற்றுப்புள்ளி வையுங்கள்..' அதிமுக கூட்டத்தில் வெடித்த கொங்கு நாடு விவகாரம்.. பரபர தகவல்கள்
சென்னை: நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், கொங்கு நாடு விவகாரம் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றிய அரசு என்ற சொல்லை முன் வைக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு என்ற சொல் பயன்படுத்தப்படுவதைத் தமிழக பாஜக தரப்பு தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது.
இந்தச் சூழலில் தான் கொங்கு நாடு விவகாரம் எழுந்தது. தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாகவே பேசுபொருளாக உள்ளது கொங்கு நாடு விவகாரம் தான்.
கொங்கு நாடு தேவை உள்ளது.. அரசின் செயல்பாடுகளை பொறுத்தே அடுத்தகட்ட முடிவு.. வானதி சீனிவாசன் பரபரப்பு
கொங்கு நாடு விவகாரம்
மத்திய அமைச்சரவை கடந்த சில வாரங்களுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. இணை அமைச்சராகப் பதவியேற்ற எல் முருகன் தனது ட்விட்டர் பயோ குறிப்பில் கொங்கு நாடு எனக் குறிப்பிட்டிருந்தார். இது மிகப் பெரிய பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்கு மண்டலத்தைத் தனி யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
வானதி சீனிவாசன்
இது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. பாஜக தரப்பில் ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு கருத்தைத் தெரிவித்திருந்தனர். சில மூத்த தலைவர்கள் கொங்கு நாடு குறித்த தகவல்கள் தவறானவை என மறுத்தனர். அதேநேரம் கடந்த சில நாட்களுக்கு முன் கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கொங்குப் பகுதி பின்தங்கியுள்ளதால் கொங்கு நாடு தேவை உள்ளதாகவும் புதிய அரசு கொங்கு மண்டலத்திற்கும் அளிக்கும் திட்டங்களின் அடிப்படையில் கொங்கு நாடு விவகாரத்தில் பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
கே பி முனுசாமி
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பானது. அதிமுக தரப்பில் இருந்து கொங்கு நாடு விவகாரம் தொடர்பாகத் தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தும் வரவில்லை. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி மட்டும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், தமிழக மக்களிடம் கொங்கு நாடு என்ற பிரிவினை விதைகளை விதைக்க வேண்டாம் என்றும் இப்படி ஒரு விசமத்தனமான சிந்தனையில் இறங்குவது என்பது நாட்டுக்கு நல்லதல்ல எனத் தெரிவித்திருந்தார்.
ஆலோசனைக் கூட்டம்
அதிமுக வலுவாக உள்ள பகுதிகளில் முக்கியமானது கொங்கு மண்டலம், இந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிலும்கூட அதிமுகவுக்குப் பெருவாரியான வெற்றியை அளித்தது கொங்கு மண்டலம் தான். எனவே, கொங்கு நாடு குறித்து வெளிவரும் கருத்துகளை அதிமுக நிர்வாகிகள் ரசிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் நேற்று சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சசிகலா
இந்த ஆலோசனைக் கூட்டம் முதலில் ரத்து செய்யப்படுவதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், சில மணி நேரம் தாமதத்திற்குப் பின் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சசிகலா விவகாரம் ஆகியவை குறித்து முக்கியமாகப் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முற்றுப்புள்ளி
இதுமட்டுமின்றி கொங்கு நாடு விவகாரம் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கொங்கு நாடு விவகாரத்தில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தலைமை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். இது குறித்து பாஜக தலைவர்களுடன் பேசி கொங்கு நாடு விவகாரத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
விரைவில் இறுதி முடிவு
சட்டசபைத் தேர்தலில் பாஜக உடனான கூட்டணியால் தான் அதிமுக தோல்வியடைந்ததாகக் கூறி பல நிர்வாகிகளும் திமுகவில் இணைந்து வருவதால், இந்த விவகாரத்தில் அதிமுக தலைமை விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து கொங்கு நாடு விவகாரம் தொடர்பாக விரைவில் அதிமுக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகிறது.