Exclusive: எடப்பாடியார் இதை முதலில் செய்யட்டும்... நான் பாராட்டு விழா நடத்துகிறேன் -கொங்கு ஈஸ்வரன்
சென்னை: கொங்கு மண்டலத்தில் தமிழகத்தின் 2-வது தலைநகரை அமைத்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல் நபராக பாராட்டு விழா நடத்துவேன் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தொழில்துறை வளர்ச்சி மிகுந்த பகுதியில் தான் 2-வது தலைநகரம் அமைக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்ட தகவலின் விவரம் பின்வருமாறு;
சூப்பர்.. "கோவிஷீல்டு" தடுப்பூசி செலுத்தப்பட்ட 2 பேருமே நல்லா இருக்காங்களாம்.. புனே ஆஸ்பத்திரி தகவல்
அமைச்சர் உதயகுமார்
''தமிழகத்தில் தற்போது 2-வது தலைநகரம் கோரிக்கையை அமைச்சர் உதயகுமார் எழுப்பியிருப்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளாக இது பற்றி வாய் திறக்காத அவர் ஆட்சி முடிவதற்கு 6 மாதத்திற்கு முன் இந்த கோரிக்கையை வைக்கிறார் என்றால் அதில் உள்நோக்கம் இருப்பதாக தான் நினைக்கத் தோன்றுகிறது. அரசு மீத மக்களின் கோபத்தை திசை திருப்பி மண்டல வாரியாக மக்களின் கவனத்தை சிதறடிக்கவே இந்த 2-வது தலைநகரம் கோரிக்கையை அவர் எழுப்பியதாக பார்க்கிறேன்.''
அஜாக்கிரதை கூடாது
''ஒரு வேளை 2-வது தலைநகரை அரசு உருவாக்க வேண்டும் என நினைத்தால் அது கொங்கு மண்டலமாக தான் இருக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற கிளையை தாரைவார்த்தது போல், பெருந்துறையில் அமையவிருந்த எய்ம்ஸ் மருத்துவமனையை தாரை வார்த்தது போல் 2-வது தலைநகரம் விவகாரத்தில் கொங்கு மண்டல அமைச்சர்கள் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது''.
அபார வளர்ச்சி பெறும்
''சென்னைக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் வேலைவாய்ப்புகளை தேடி திருப்பூர், கோவை என கொங்கு மண்டலத்திற்கு தான் வருகிறார்கள். இதனால் கொங்கு மண்டலத்தில் உள்ள தொழில்துறை வளர்ச்சிகளை கருத்தில் கொண்ட 2-வது தலைநகரம் அமைக்கப்பட்டால் பிற்காலத்தில் சென்னையை பின்னுக்கு தள்ளி அபார வளர்ச்சி அடைய அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன. இதை ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை, பல கோணங்களிலும் ஆராய்ந்தே இதைக் கூறுகிறேன்''.
முதலமைச்சருக்கு விழா
''2-வது தலைநகரம் விவகாரத்தில் கொங்கு மண்டல அமைச்சர்கள் கோரிக்கை எழுப்பாததில் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் 2-வது தலைநகரை கொங்கு மண்டலத்தில் அமைத்தால் அவருக்கு நிச்சயம் பாராட்டு விழா நடத்துவேன். இதனிடையே, தேர்தல் வருவதால் மக்களை குழப்பி அரசியல் செய்வதற்காக 2-வது தலைநகரம் அமைக்க வேண்டும் என்ற கோஷத்தை அமைச்சர் உதயகுமார் எழுப்பியிருப்பாரோ என்ற சந்தேகமும் எனக்கு இருக்கிறது.''