இங்க பாருங்க.. இதை எப்படி குடிக்கிறது.. வாட்டர் பாட்டிலை எடுத்து காட்டிய திமுக எம்எல்ஏ வரலட்சுமி
குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி திமுக சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.
Recommended Video
சென்னை: "இங்க பாருங்க.. உப்பு கலந்து, கழிவுநீர் கலந்து தான் தண்ணி வருது.. இதை எப்படி மக்கள் குடிக்க முடியும்" என்று செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகம் முழுவதும் தண்ணீருக்கு குடத்தை தூக்கி கொண்டு அலைய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சில கிராமங்களில் 10 நாள் ஆனாலும் தண்ணீர் வருவதில்லையாம். இதனால் பொதுமக்கள் வேறு வழி தெரியாமல் போராட்டங்களில் இறங்கி உள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் கண்டன குரல் எழுப்பி மக்கள் பிரச்சனைகளில் பங்கெடுத்து வருகின்றன. அந்த வகையில், இன்று திமுக சார்பில் கூடுவாஞ்சேரியில் முற்றுகை போராட்டம் நடந்தது.
கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் திடீரென 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வந்துவிட்டனர். இதற்கு கூடுவாஞ்சேரி முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்கே தண்டபாணி தலைமை தாங்கினார்.
அத்தனை பேரும் சேர்ந்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சிறிது நேரத்தில் காலிகுடங்களுடன் ஏராளமான பெண்களும் கிளம்பி வந்து இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பொது மக்களுடன் சேர்ந்து எழுச்சி மிகு கண்டன கோஷத்தை எழுப்பியவர் செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன்தான்.
இவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மக்கள் பிரச்சனையிலேயே இந்த தண்ணீர் பிரச்சனைதான் அதிகமாக உள்ளது. அடிப்படை வசதிகளை கூட இப்படி போராடி வாங்க வேண்டிய நிலையில் அதிமுக உள்ளது. 10 நாளுக்கு ஒரு முறை தண்ணி வருது. அந்த தண்ணி கூட இந்த மாதிரி கலர்ல வருது பாருங்க. இது குடிப்பதற்கு ஏற்றதாகவே இல்லை. உப்பு கலந்து, கழிவுநீர் கலந்து தான் வருது" என்று கலங்கலான நீர் உள்ள வாட்டர் பாட்டிலை எடுத்து செய்தியாளர்களிடம் காட்டினார்.