சாத்தான்குளம்.. "ஜாதி"யை நுழைத்து அழகிரி விட்ட அறிக்கை.. கொந்தளிக்கும் மக்கள்..சிக்கலில் காங்கிரஸ்!
கே.எஸ்.அழகிரியின் சர்ச்சை அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: ஜெயராஜ் நாடார், பெனிக்ஸ் நாடார் உயிரிழக்க காரணமான போலீசார் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கேஎஸ். அழகிரி அறிக்கை விடவும், ட்விட்டர்வாசிகள் கொந்தளித்து உள்ளனர்.. "அது என்ன நாடார்.. இதுல நாடார் எங்க வந்தது.. எல்லாரையும் ஜாதி பாத்துதான் பேசுவிங்களா?" என்று அழகிரியை கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
3 நாட்களாக சாத்தான்குளம் லாக்அப் மரணம் தமிழக மக்களை உலுக்கி எடுத்து வருகிறது.. விசாரணைக்கு அழைத்து போன தந்தையும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதற்கு வியாபாரிகள் ஆவேசமாகி போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
எதிர்க்கட்சிகள் இது சம்பந்தமான கேள்விகளை எழுப்பி வருகிறது. மதுரை ஹைகோர்ட் சாட்டையை கையில் எடுத்துள்ளதுடன், இனி இதுபோல் லாக்அப் மரணங்கள் நிகழக்கூடாது, எல்லாவற்றையும் ஹைகோர்ட் கண்காணித்து வருகிறது என்று காட்டமாக கூறியுள்ளது.
கே.எஸ்.அழகிரி
பல்வேறு கட்சிகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரியும் இதற்கான நியாயத்தை கேட்டு அறிக்கை விட்டுள்ளார்.. "ஜெயராஜ் நாடார், பெனிக்ஸ் இம்மானுவேல் நாடார் ஆகியோர் காவல்துறையினரால் அடைத்து வைக்கப்பட்ட போது கடுமையாக தாக்குதலின் காரணமாக இறந்திருப்பதினால் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கேட்டுள்ளார்.
மரணம்
அழகிரி கேட்டது நியாயமே.. சரியானதும் கூட.. உயிரிழந்த அப்பாவிகளின் மரணத்துக்கு நீதி தேவைதான்.. ஆனால் ஜெயராஜ் நாடார், பெனிக்ஸ் நாடார் என்று ஏன் குறிப்பிட்டார் என தெரியவில்லை.. இறந்தவர்கள் தூத்துக்குடி என்பதால், அந்த பகுதியில் இச்சமூகத்தினர் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததுதான்.. அதுவும் இல்லாமல் தந்தையும், மகனும் கடை வைத்திருந்ததும் அனைவரும் அறிந்ததுதான்.
நாடார்
2 நாட்களாக பல்வேறு தலைவர்கள் இந்த மரணம் குறித்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில், அழகிரி மட்டும் நாடார் என்று ஏன் குறிப்பிட்டார் என்பதுதான் ட்விட்டர்வாசிகளின் கேள்வி.. "அது என்ன நாடார்? சத்தியமூர்த்தி பவனில் வாங்கிய பட்டமா ? இறந்தது இரு அப்பாவிகள்.. இதுல ஜாதி எங்கிருந்து வந்தது?
என்ன வித்தியாசம்?
காங்கிரஸ் தேசிய கட்சியா? இல்ல நாடார் கட்சியா? தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இது என்ன ஜாதி அரசியல்? உங்களுக்கும் பாமகவிற்கும் என்ன வித்தியாசம்? ஜெயராஜ், பெனிக்ஸ் இம்மானுவேல் என்று பதிவிட்டால் போதாதா? ஏன் நாடாரை சேர்த்துக் கொள்கிறீர்கள்? இடத்தை பொறுத்து ஜாதிப்பெயரை சேர்த்து கொள்வீர்களா? ஜாதிப்பெயரை போடவில்லை என்றால் தேர்தலில் வாக்குகள் போய்விடுமா? "என்றெல்லாம் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
மரணம்
ஆனால், அழகிரி ஏன் அப்படி குறிப்பிட்டார்.. தெரியாமல் குறிப்பிட்டுவிட்டாரா? அல்லது தெரிந்தே குறிப்பிட்டாரா? தெரிந்தே குறிப்பிட்டிருந்தால் அது நம்மால் ஏற்க முடியாதது.. வழக்கமாக மரணங்கள் தொடர்பான விவகாரங்களில் தலைவர்கள் அறிக்கை வெளியிடுவது இயல்பான ஒன்றுதான் என்றாலும் அழகிரியின் இந்த அறிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆச்சரியம்
மற்ற தலைவர்களும்தான் இந்த கொடூர மரணத்தை கடுமையாக கண்டித்துள்ளனர். இரண்டு அப்பாவிகள் இப்படி உயிர் பலி எடுக்கப்பட்டிருப்பதை அனைவருமே ஒரே குரலில் கண்டித்துள்ளனர். யாருமே இங்கு ஜாதி பார்க்கவில்லை. மனதை உலுக்கிய மரணமாக மட்டுமே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால் ஒரு தேசியக் கட்சியின் தலைவர் எப்படி இப்படி ஜாதியை கொண்டு இதில் நுழைத்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது!!