மீண்டும் அதிர்ச்சி தரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்.. புதிதாக 50 பேருக்கு கொரோனா உறுதி
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் கடந்த 22 நாட்களாக நடத்தப்பட்ட பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கொரோனா தொற்று வேகமாக பரவியதால் கடந்த மார்ச் இறுதியில் மூடப்பட்டது. அங்கிருந்து மார்க்கெட் தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டது. மாதவரம் பேருந்து நிலையத்தில் பழ சந்தையும், வானகரத்தில் பூ சந்தையும் மாற்றி அமைக்கப்பட்டது.
சென்னையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து கடந்த மாதம் 18-ந் தேதி கோயம்பேடு உணவு தானிய அங்காடியும், 28-ந் தேதி காய்கறி சந்தையும் மீண்டும் திறக்கப்பட்டது.
கடும் கட்டுப்பாடு
காய்கறி சந்தையில் 200 பெரிய மொத்த வியாபார கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. காய்கறி வாங்க வரும் வியாபாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டிருக்கிறது.
2800 பேருக்கு பரிசோதனை
கடந்த மாதம் 18-ந் தேதி முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் தினந்தோறும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 18-ந் தேதி முதல் கடந்த 10-ந் தேதி வரையிலான 22 நாட்களில் 2 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
தீவிரமாக கண்காணிப்பு
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் கடந்த 22 நாட்களாக நடத்தப்பட்ட பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது மொத்தம் உள்ளவர்களில் 1.5 சதவீதமாகும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விவரங்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். மேலும் பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று இருக்கிறதா? என்று அந்தந்த மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தீவிரமாக கண்காணிக்கிறார்கள் என்றார்
சென்னையில் அதிகரிப்பு
சென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்பட 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிவது போன்றவை மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதால் அரசு அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதை கடைபிடிக்க மறுப்பவர்களால் கொரோனா பரவுவது அதிகமாக வருகிறது.
கூட்டாக பேட்டி
இதனிடையே சென்னை கோயம்பேடு அனைத்து பழ வியாபாரிகள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் எஸ்.சீனிவாசன், பழக்கடை கே.ஜெயராமன், எம்.தியாகராஜன், த.மணிவண்ணன் உள்ளிட்டோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், கோயம்பேடு உணவு தானிய அங்காடி மற்றும் காய்கறி சந்தை முறையே கடந்த மாதம் 18 மற்றும் 28-ந்தேதிகளில் திறக்கப்பட்டது. பூ, பழ சந்தைகள் விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும், சிறு வியாபாரிகளுக்கும் அனுமதி கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகிறது.
வெளிவியாபாரிகள்
இந்தநிலையில் கோயம்பேடு வியாபாரிகள் மூலம் மீண்டும் கொரோனா பரவுகிறது என்று உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி வருகிறது.. கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 22 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1.5 சதவீதம் பேருக்கு அதாவது 40 முதல் 50 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்கு உள்ளானவர்கள் மார்க்கெட் வியாபாரிகள் அல்ல, மார்க்கெட்டுக்கு வந்து சென்ற வெளி வியாபாரிகள் என்பதே உண்மை. மார்க்கெட் வியாபாரிகளால் கொரோனா பரவவில்லை. தவறான தகவல்கள் மூலமாக வியாபாரிகளின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரசுக்கு கோரிக்கை
மாதவரம், திருமழிசையை விட கோயம்பேடு சந்தை மிக பாதுகாப்பாக உள்ளது. எனவே தவறான தகவல்களுக்கு செவிசாய்க்காமல் வியாபாரிகள்-தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி கோயம்பேடு சந்தையை முழுவதுமாக திறக்க தமிழக அரசும், சி.எம்.டி.ஏ. நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" இவ்வாறு வலியுறுத்தினர்.