ஓபிஎஸ்-சை விட்டு விட்டு ஈபிஎஸ் -சோடு நெருங்கும் கே.பி.முனுசாமி
Recommended Video
சென்னை: ஓபிஎஸ் தர்மயுத்தம் ஆரம்பித்த நாளில் இருந்து அவருக்கு வலது கரமாக செயல்பட்டு வந்தவர் கே.பி.முனுசாமி அவர் இப்போது ஒ. பன்னீர் செல்வத்தை விட்டு விட்டு பழனிசாமியோடு நெருங்க ஆரம்பித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் 2017 பிப்ரவரி முதல் வாரத்தில் ஜெயலலிதாவின் கல்லறைக்கு சென்று தியானம் தொடங்கி தர்ம யுத்தம் நடத்தினார். அந்த தியானமும் பின்னர் நடந்த இணைப்பும் பாஜக கூறித்தான் செய்தேன் என்று ஓபிஎஸ் சே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது வேறு கதை. அப்போது ஓபிஎஸ் நடத்திய தியானம் முதல் ஓபிஎஸ்-ன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பெரும் ஆதரவாக இருந்து வந்தவர் கே.பி முனுசாமி. முன்னாள் அமைச்சரான கே.பி. முனுசாமி ஜெயலலிதா இருந்தபோதே மிகுந்த செல்வாக்குடன் வலம்வந்தவர்.
2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வென்றபோது இரண்டு இடங்களில் கோட்டைவிட்டது அதில் ஒன்று அன்புமணி வென்ற தருமபுரி தொகுதி. அதில் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளானவர்தான் இந்த கே.பி.முனுசாமி. அதற்கு முன்னதாகவே இவருக்கும் மன்னார்குடி குடும்பத்திற்கும் ஆகாது. ஜெயலலிதா இருக்கும்போதே, 'நீங்கள் பிடித்துவைத்தால்தான் பிள்ளையார். இல்லையென்றால் எவரும் சாணிதான்' என்று சசிகலாவை கடுமையாக தாக்கி பொதுக்குழுவில் பேசினார். பின்னர் காட்சிகள் மாறியபோது ஜெயலலிதா இறந்து சசிகலா கட்சியின் பொது செயலாளராக பொறுப்பு ஏற்றபோது முதன்முதலாக கலகக் குரல் எழுப்பியவர் கே.பி.முனுசாமிதான்.
ஒரு சீட்டுக்கு அதிமுகவில் அடிதடி.. எனக்கு சீட் தாருங்கள்.. வேதனையாக உள்ளது.. தமிழ் மகன் உசேன் கடிதம்
அதன் பின்னர் தன்னிடம் இருந்த முதல்வர் பதவி பறிக்கப்பட்டதால்தான் தர்மயுத்தம் நடத்த வீதிக்கு வந்தார் ஓபிஎஸ். இதைப் பார்த்த கே.பி.முனுசாமி "பரவாயில்லை சசிகலாவை ஓபிஎஸ் எதிர்க்கிறாரே" என்று எண்ணிதான் பன்னீர் பக்கம் கரை ஒதுங்கினார். அப்போது தென்மாவட்டத்தை சேர்ந்த கட்சியினர் பலரும் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்தாலும் வடமாவட்டங்கள் ஓபிஎஸ் -க்கு ஆதரவின்றியே இருந்தது. பின்னர் வடமாவட்டங்களும் ஓபிஎஸ் -க்கு ஆதரவு தெரிவிக்க முக்கிய காரணமாக இருந்தவர் கே.பி. முனுசாமி. இப்படி இருந்த ஓபிஎஸ்-ம் கே.பி முனுசாமி இடையே இடைவெளி அதிகரித்து தற்போது இருவருமே கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அதிமுக சார்பில் நந்தனம் வர்த்தக மையத்தில் இஃப்தார் விருந்து நடந்தபோது முதல் வரிசையில் ஓபிஎஸ் -ன் மகன் ரவீந்திர நாத் வந்து அமர்ந்துள்ளார். இதை பார்த்த கே.பி முனுசாமி அந்த இடத்திலேயே ரவீந்திர நாத்திடம் சத்தம் போட்டுள்ளார். கட்சியின் சீனியர்கள் இருக்கும் இடத்தில் நீ வந்து அமருவதா என்று எகிறியுள்ளார். இந்த சம்பவம் விருந்து முடிந்த பிறகு ஓபிஎஸ் -ன் காதுகளுக்கு சென்றுள்ளது. பின்னர் ஓபிஎஸ் கே.பி,எம்மை அழைத்து தனது மகனிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதற்கு முன்னதாகவே இருவருக்கும் பனிப்போர் நடந்து வந்துள்ளது கே.பி.எம் எப்போதுமே ஓபிஎஸ் எங்கு சென்றாலும் உடன் செல்வார். சில நாட்களாகவே ஓபிஎஸ் செல்லும் இடங்களுக்கு கே.பி.எம் செல்வதில்லை. இம்மாதம் 5-ம் தேதி ஓபிஎஸ் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனனை சந்திக்க சென்றுள்ளார். அப்போதும் கே.பி.எம் உடன் செல்லவில்லை. முன்னதாக கே.பி.எம் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டபோது தேர்தல் செலவுகள் குறித்து ஓபிஎஸ் -ஸிடம் சில மனவருத்தங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் அதை தேர்தல் முடிவு வரை ஓபிஎஸ் கண்டுகொள்ளவே இல்லை என்று கூறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
இந்த நிலையில்தான் ராஜன் செல்லப்பா நேற்று முன்தினம் கலகக் குரல் ஒன்றை எழுப்பினார். அதற்கு பின்னணி என்பது குறித்து ஒன் இந்தியா தமிழ் ஏற்கனவே "ராஜன் செல்லப்பா ஆரம்பம்தான்.. அடுத்தடுத்து நிறைய கிளம்பப் போகுதாம்" என்ற தலைப்பில் கூறியிருந்தது. ராஜன் செல்லப்பா ஓபிஎஸ்-க்கு எதிராகத்தான் கிளம்பியிருக்கிறார். அதன் பின்னணியில் ஈபிஎஸ் இருக்கிறார் என்று தெரிந்தும், ராஜன் செல்லப்பா குறித்து பேசிய கே.பி.முனுசாமி 'அது அவரது சொந்தக் கருத்து' என்று சிம்பிளாக கூறிவிட்டார்.
ராஜன் செல்லப்பா போட்ட குண்டு தனக்கு எதிரானது என்று தெரிந்தும் தனக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட முனுசாமி பேசவில்லை என்பது ஓபிஎஸ் தரப்புக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் ராஜன் செல்லப்பாவின் பேட்டி குறித்து நேற்று பேசிய முனுசாமி 'ராஜன் செல்லப்பா யாரையோ மனதில் வைத்துக் கொண்டுதான் இப்படி பேசியிருக்கிறார். அவர் இது போன்ற கருத்துகளை தவிர்த்து இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட கருத்துகளை அவர் கூறக்கூடாது என்றும் முனுசாமி கூயிருக்கிறார்.'
முனுசாமி இப்படி விலகுவதற்கு இன்னொரு முக்கிய காரணத்தையும் கூறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள் அதாவது ஓபிஎஸ் தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி பெற்றே தீருவது என்று ஒற்றைக் காலில் நிற்பது முனுசாமிக்கும் பிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். இப்படியாக ஓபிஎஸ்-க்கு தோளோடு தோள் நின்ற முனுசாமி ஓபிஎஸ்-ஐ விட்டு விலக ஆரம்பித்துள்ளார்.