அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலாவுக்கு நோட்டீஸ்... கிருஷ்ணகிரி டிஎஸ்பி மீது ஐகோர்ட்டில் வழக்கு!
சென்னை: பெங்களூரு இருந்து கார் மூலம் தமிழகம் திரும்பிய சசிகலாவிடம் அதிமுக கொடியைப் பயன்படுத்தக் கூடாது என நோட்டீஸ் கொடுத்த கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காவல்துறை நிலை விதிகளை மீதிய டி.எஸ்.பி. சரவணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சசிகலா நேற்று முன்தினம் பெங்களுருவில் இருந்து சென்னை வந்தார்.
சென்னை வந்த சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, பிப்ரவரி 8-ம் தேதி பெங்களூருவில் இருந்து காரில் தமிழகம் வந்தார். அப்போது சசிகலாவின் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது.
காரில் அதிமுக கொடி
முன்னதாக அவரை வரவேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் அறிவழகன் காவல்துறையிடம் விண்ணப்பித்திருந்தார்.இதை பரிசீலித்த காவல் துறையினர், சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதியளித்தனர்.ஆனால் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது.
கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. மீது வழக்கு
இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. சரவணன், இதுதொடர்பான நோட்டீசை, அனுமதி கோரிய அறிவழகனிடம் கொடுக்காமல், தமிழக எல்லைக்குள் வந்த சசிகாலாவிடம்கொடுத்தார்.இந்த நிலையில் நோட்டீசை கொடுத்த டி.எஸ்.பி. சரவணன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விதிகளை மீறி விட்டார்
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. சரவணன், சசிகலா வருகை தொடர்பாக அறிவழகன் அளித்த விண்ணப்பத்தின் மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அவரிடம் கொடுக்காமல், சசிகலாவிடம் கொடுத்துள்ளார் இதனால் அவரை வரவேற்க திரண்டிருந்த தொண்டர்கள் இடையே பதட்ட நிலையை உருவாக்கியது. காவல்துறை நிலை விதிகளை மீறிய டி.எஸ்.பி. சரவணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.