சண்முகம் இடத்தில் எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ்.. நிதித்துறை செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழக அரசில் சுமார் 9 ஆண்டுகள் நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் ஐஏஎஸ், தமிழக அரசின் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய நிதித்துறை செயலாளராக எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ்ஸை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1981ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்தார். அவரது பதவி காலம் ஜுன் 30ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து 1985ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த சண்முகம் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக சண்முகம் நிதித்துறை செயலாளராக கடந்த 2010ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவியில் யாரை நியமிப்பது என்று ஆலோசித்து வந்த தமிழக அரசு இறுதியாக தமிழக வீட்டுவசதித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ்ஸை நிதித்றை செயலாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.
1989ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிரியான எஸ் கிருஷ்ணன் 1991ம் ஆண்டு கடலூர் மாவட்ட சப் கலெக்டராக பணியாற்றினார். 1996, 97ம் ஆண்டுகளில் தமிழக பாடநூல் நிறுவன மேலாண்மை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
அதன்பிறகு விருதுநகர் மாவட்ட கலெக்டர், வணிகவரித்துறை இயக்குனர், தமிழ்நாடு காகித ஆலை கூடுதல்இயக்குனர், வீட்டுவசதித்துறை முதன்மைச் செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கிருஷ்ணன் ஐஏஎஸ் நித்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர் என்பதால் அவரை நிதித்துறை செயலாளராக தமிழக அரசு நியமித்துள்ளது.
இதனிடையே கிருஷ்ணன் வகித்து வந்த வீட்டுவசதித்துறை முதன்மைச் செயலாளர் பொறுப்பை சென்னை மாநகர வளர்ச்சி அதிகாரி ராஜேஷ் லக்கானி கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.