நீட்டை தொடர்ந்து இந்திக்கும் ஆதரவு.. தமிழகத்தில் விரைவில் பிரச்சாரம்.. கிருஷ்ணசாமி தடாலடி அறிவிப்பு
சென்னை: தமிழக மாணவர்களுக்கு இந்தி தேவை என பிரச்சாரம் செய்யவுள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவின் பரிந்துரைபடி 8-ஆம் வகுப்பு வரை 3-ஆவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்படும். இதற்கு கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாநில சுயாட்சியை வலியுறுத்தி பூடாகமாக ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்- சமூக வலைதளங்களில் பரபரப்பு!
அறிவிப்பு
இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி தமிழக பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற ஒரு அறிவிப்பை நேற்றைய தினம் வெளியிட்டது.
இந்தி மொழி
இதுகுறித்து சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கஸ்தூரி ரங்கன் கொள்கையில் பல்வேறு நல்ல அம்சங்கள் உள்ளன. இந்தி மொழி கொள்கையை புதிய தமிழகம் கட்சி முழுவதும் வரவேற்கிறது.
பிரச்சாரம்
இந்தி மொழியை கற்பதற்கான வாய்ப்பு தமிழகத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. விருப்பத்தின் அடிப்படையில் இந்தி படிக்கலாம் என்ற அறிவிப்பை மாணவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இந்தியை கற்பிக்க ஏதுவான சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். தமிழக மாணவர்களுக்கு இந்தி தேவை என பிரச்சாரம் செய்யவுள்ளேன் என்றார் கிருஷ்ணசாமி.
சர்ச்சைக்குரிய வகையில் கருத்து
தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டபோது மருத்துவ கனவு நிறைவேறாத விரக்தியில் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அப்போதும் நீட் தேர்வை ஆதரித்து பேசிய கிருஷ்ணசாமி, அனிதா தற்கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.