காங். சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் மார்ச் 6,7-ல் நேர்காணல் - கே.எஸ்.அழகிரி
சென்னை: சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 6 மற்றும் 7-ந் தேதிகளில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேர்காணல் நடைபெற உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-நடைபெறவுள்ள 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடளுமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் தொண்டர்களிடமிருந்து பிப்ரவரி 25 முதல் சென்னை, சத்தியமூர்ததி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. விருப்ப மனு அளிக்க இறுதி நாள் மார்ச் 5-ந்தேதி ஆகும்.
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த அனைவரிடமும் மார்ச் 6 மற்றும் 7-ந் தேதிகளில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. விருப்ப மனுவினை சமர்ப்பித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் நடைபெறும் நேர்காணலில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.