அதெப்படி இப்படியெல்லாம் வித்தியாசம் வரும்... 'சதி' என தேர்தல் கணிப்புகள் மீது அழகிரி சந்தேகம்
சென்னை: இந்த முறை மோடி இல்லாத அரசாங்கம் மத்தியில் அமையும் என்றும் தேர்தல் கணிப்புகள் வேண்டுமென்றே வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "தேர்தலின் முடிவு நிலை மாற்றம் வர உள்ளது .அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் தவறான தகவல்களை பரப்பி உள்ளார்கள்.
38 தொகுதிகளில் வெற்றி
மக்களின் நாடியை பிடித்து பார்த்து சொல்கிறேன். இந்தமுறை மோடி இல்லாத அரசாங்கமே மத்தியில் ஆட்சி அமைக்கும். மோடி ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. தமிழகத்தில் 38 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெல்லும்.
எப்படி கணிப்பாகும்
நேற்றைய நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பில் 242 இடங்களில் பாஜக வெல்லும் என்று கூறப்பட்டு இருந்தது. நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் 336 இடங்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் பார்க்கும் போது 100 தொகுதிகள் வரை வித்தியாசம் வருகிறது. கருத்துக்கணிப்பு என்பது 5 அல்லது ஆறு தொகுதிகள் வரை தான் வித்தியாசம் வரும். ஆனால் 100 தொகுதிகள் என்றால் எப்படி கருத்துக்கணிப்பாக இருக்க முடியும்.
தேர்தல் ஆணையம் ஏஜெண்ட்
இதை இரண்டு காரணங்களுக்காக செய்கிறார்கள். ஒன்று, 23ம் தேதி எதிர்க்கட்சிகள் அவசர கூட்டம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதை வைத்துக்கொண்டு கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மற்றொன்று தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு தனது ஏஜெண்டாக பாவித்து தாங்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ள இடங்களில் தவறுகளை செய்யலாம் என திட்டத்தை தீட்டி இருக்கிறார்கள்.தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் கருத்து வேறுபாடுகளை தேர்தல் ஆணையம் பதிவு செய்யவில்லை.
பஞ்சத்தில் தமிழ்நாடு
தமிழகத்தில் குடிநீர் பஞ்சத்தை தேர்தல் நேரம் என்பதால் அதை யாரும் கவனிக்கவில்லை. தற்போது உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசால் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க முடியவில்லை" என்றார்