ரூ.12,000 கோடியில் நெடுஞ்சாலை டெண்டர் எதற்கு...? என்ன அவசரம் வந்தது இப்போது...? -கே.எஸ்.அழகிரி
சென்னை: நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடுவதற்கான அவசியம் இப்போது என்ன என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வினவியுள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்க கட்டமைப்பு வசதிகளை பெருக்குகிற வகையில் நிதியை ஒதுக்காமல் ஆதாய நோக்கத்தோடு டெண்டரில் அக்கறை காட்டுவதாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கேள்விக்குறி
கொரோனா பரவலைத் தடுக்க கட்டமைப்பு வசதிகளை பெருக்குகிற வகையில் நிதியை ஒதுக்காமல் ஆதாய நோக்கத்தோடு நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற போர்வையில் சில முடிவுகளை தமிழக அரசு எடுத்திருக்கிறது. கொரோனா காலத்தில் இத்தகைய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அவசியமா என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.
சுற்றுச்சூழல்
ரூபாய் 12 ஆயிரம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை விரிவாக்கம், சாலை உறுதிப்படுத்துதல், போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளுக்காக தமிழக அரசு தனது இணைய தளத்தில் டெண்டர் வெளியிட்டிருக்கிறது. இதற்கு சூழல் தாக்க மதிப்பு கட்டாயமல்ல என்ற ஓட்டையை பயன்படுத்தி ஐ.ஆர்.சி. வழிகாட்டுதல்களை புறக்கணித்து டெண்டர் விடப்பட்டுள்ளன. சாலைத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்கத்தை கணக்கில் கொள்ளாமல் டெண்டர் விடுவது மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சாலை பராமரிப்பு
கடந்த 5 வருடங்களில் மட்டும் தனது வழக்கமான சாலைகள் மற்றும் பாலங்கள் பழுது பார்ப்பதற்காக தமிழக அரசு சுமார் 41 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. இந்த வருடம் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யவிருக்கிறது. வருடந்தோறும் பல்லாயிரம் கோடிகள் சாலை பராமரிப்புக்கு செலவிடப்படும் நிலையில் மேலும் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு நிதி செலவிடப்படுவது அவசியமா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.
கடன் சுமை
கொரோனா போன்ற பெருந்தொற்றில் இருந்து நாம் இன்னும் மீண்டிடாத நிலையில் தமிழக அரசின் நிதிநிலைமை கடன்சுமையிலும், பற்றாக்குறையிலும் அதலபாதாள நிலையிலிருக்கும் போது ரூபாய் 12 ஆயிரம் கோடியில் நெடுஞ்சாலைத் திட்டம் தேவையா என்று மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. கொரோனாவை ஒழிக்க நிதி ஒதுக்கீடு என்பது தமிழக அரசின் முதன்மை நோக்கமாக இருக்கவேண்டும். மேலும் பொருளாதாரப் பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க நிதி ஒதுக்கப்படவேண்டும். அவற்றுக்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து நிதி ஒதுக்காமல் நெடுஞ்சாலைத் திட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாயை விரயம் செய்வதில் தமிழக அரசுக்கு ஏதே உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது.
வலியுறுத்தல்
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகியவற்றின் ஆய்வுக்குட்படாமல் நெடுஞ்சாலைத் துறையில் ரூபாய் 12 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டங்களை நிறைவேற்றுவது கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் தேவையற்ற ஒன்று என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த டெண்டரை விடுவதன் மூலம் ஏதோ ஒரு வகையில் ஆதாயம் பெறுவதற்கான முயற்சியில் அ.தி.மு.க. அரசு ஈடுபட்டிருக்கிறது என்கிற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. எனவே, இன்றைய சூழலில் ரூபாய் 12 ஆயிரம் கோடி நெடுஞ்சாலைத் துறைக்கான டெண்டரை உடனடியாக ரத்து செய்து அந்த நிதியைக் கொண்டு கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்குப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.