சபாஷ்.. மதவாத சக்திகளை வீழ்த்த கமல்ஹாசன் ஆதரவு.. காங்கிரஸ் பாராட்டு மழை
மதவாத, வகுப்புவாத சக்திகளை வீழ்த்த வேண்டுமென்பதில் கமல் உறுதியாக இருப்பதாக கே.எஸ்.அழகிரி புகழாரம்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளித்ததன் மூலம் கமல்ஹாசன் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளதாக கே.எஸ்.அழகிரி பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பன்முகத்தன்மையும், இறையாண்மையும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டதை முற்றிலும் உணர்ந்து மதவாத, வகுப்புவாத சக்திகளை வீழ்த்த வேண்டுமென்பதில் கமல் உறுதியாக இருப்பது இதன் மூலம் தெரிய வருவதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு..காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுத்த கமல்ஹாசன்
ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களை ஆதரிப்பது எனும் முடிவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் அறிவித்திருப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வகுப்புவாத சக்திகளை வீழ்த்த
இன்றிருக்கும் அரசியல் சூழலில் மதவாத சக்திகள் முழு பலத்துடன் எதிர்க்கப்பட வேண்டியவைகள் என்பதை கருத்தில் கொண்டு நிபந்தனையற்ற ஆதரவை மக்கள் நீதி மய்யம் வழங்கியிருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையும், இறையாண்மையும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டதை முற்றிலும் உணர்ந்து மதவாத, வகுப்புவாத சக்திகளை வீழ்த்த வேண்டுமென்பதில் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு இருக்கிற தீவிரத்தன்மையை மனதார பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.
ஓரணியில் திரள வேண்டும்
ஜனநாயக சக்திகளின் குரல்வளையும், கருத்துரிமையும் ஒடுக்கப்படுவது குறித்தும், மாநில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராகவும், தீவிரமான கருத்தை மக்கள் நீதி மய்யம் வெளிப்படுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்திய நாடு இதுவரை காணாத வகையில் அரசமைப்புச் சட்டமும், ஜனநாயக நிறுவனங்களும் அச்சுறுத்தப்படுகிற இக்கால கட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதில் தலைவர் ராகுல்காந்தி அவர்களும், திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களும் ஒத்த கருத்தோடு செயல்பட்டு வருகிற நேரத்தில், அதற்கு வலிமை சேர்க்கிற வகையில் திரு. கமல்ஹாசன் அவர்களின் கருத்து அமைந்திருக்கிறது.
சரியான முடிவு
சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்த திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாகவும், காங்கிரஸ் கட்சி சார்பாகவும் மீண்டும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.