அது ஏன் "நாடார், "ரெட்டியார்".. ஜாதியை விட மாட்டேங்கிறாரே அழகிரி.. அதிகரிக்கும் முணுமுணுப்புகள்!
சாதி அரசியலை கேஎஸ் அழகிரி ஏன் விடமாட்டேங்குறார் என்ற கேள்வி எழுந்துள்ளது
சென்னை: "அதென்ன ரெட்டியார்.. நாடார் என்று அப்பட்டமாக சாதி பெயரை சொல்லி காங்கிரஸ் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறதே.. இதெல்லாம் நல்லாவா இருக்கு? ஒரு மூத்த தலைவரான கேஎஸ் அழகிரி இப்படி செய்யலாமா? என்ற கேள்விகள் நிறைந்த சர்ச்சைகள் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகிறது.
காஞ்சிபுர மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.சக்கரபாணி உடல்நிலை குறைவால் காலமாகிவிட்டார்.. இவருக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. மாநில தலைவர் கேஎஸ் அழகிரி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், "காங்கிரஸ் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு.கே. சக்கரபாணி ரெட்டியார் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.. சக்கரபாணி ரெட்டியார் அவர்களது மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்" என்ற வரிகள் உள்ளன.
இதுதான் மக்களுக்கு கொந்தளிப்பை உண்டாக்கி உள்ளது.. வெறுமனே இரங்கல் சொன்னால் ஆகாதா? சாதியை இழுத்து கொண்டு வந்துதான் இரங்கல் தெரிவிக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.. இப்படித்தான் பென்னிக்ஸ் மரணத்தின்போதும் நடந்தது.
"ஜெயராஜ் நாடார், பெனிக்ஸ் இம்மானுவேல் நாடார் ஆகியோர் காவல்துறையினரால் அடைத்து வைக்கப்பட்ட போது கடுமையாக தாக்குதலின் காரணமாக இறந்திருப்பதினால் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று அழகிரி கேட்டிருந்தார்.
ஒருவகையில், அழகிரி கேட்டது நியாயமே.. சரியானதும் கூட.. உயிரிழந்த அப்பாவிகளின் மரணத்துக்கு நீதி தேவைதான்.. ஆனால் ஜெயராஜ் நாடார், பெனிக்ஸ் நாடார் என்று ஏன் குறிப்பிட்டார் என்பதே சலசலப்பை கிளப்பியது.. இறந்தவர்கள் தூத்துக்குடி என்பதால், அந்த பகுதியில் இச்சமூகத்தினர் அதிகம் என்பது எல்லாருமே அறிந்ததுதான்.. எத்தனையோ தலைவர்கள் பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணத்துக்கு நீதி கேட்டு அறிக்கை விட்ட நிலையில், அழகிரி மட்டும்தான் நாடார் என்று குறிப்பிட்டிருந்தார்.
சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை
"அது என்ன நாடார்? சத்தியமூர்த்தி பவனில் வாங்கிய பட்டமா ? இரங்கல் அறிக்கைகளில் ஜாதி எங்கிருந்து வந்தது? காங்கிரஸ் தேசிய கட்சியா? இல்ல நாடார் கட்சியா? தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இது என்ன ஜாதி அரசியல்? உங்களுக்கும் பாமகவிற்கும் என்ன வித்தியாசம்? ஏன் நாடாரை சேர்த்துக் கொள்கிறீர்கள்? இடத்தை பொறுத்து ஜாதிப்பெயரை சேர்த்து கொள்வீர்களா? ஜாதிப்பெயரை போடவில்லை என்றால் தேர்தலில் வாக்குகள் போய்விடுமா? "என்றெல்லாம் கேள்விகளை முன்வைத்திருந்தனர். அதுபோலவே, இப்போது ரெட்டியார் என்று அழகிரி குறிப்பிட்டதற்கு சலசலப்பு கிளம்பி உள்ளது.
அன்றாவது அழகிரி தெரியாமல் குறிப்பிட்டுவிட்டார் என்று சொல்லலாம்.. ஆனால் சாதி பெயர் தெரிந்தேதான் குறிப்பிட்டுள்ளார் என்பது இன்றைய அறிக்கை வெளிப்படுத்தி உள்ளது.. ஒரு தேசியக் கட்சியின் தலைவர், அதிலும் தமிழகத்தின் மூத்த தலைவர், எப்படி இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் ஜாதியை கொண்டு இதில் நுழைத்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.. மற்றொரு புறம் 70 வருஷங்களாக சாதியை ஒழிக்க போராடும் கூட்டணியில் திமுகவும் இதற்கு கண்டனத்தை சொல்லாமல் அமைதி காப்பது அதைவிட ஆச்சரியமாக உள்ளது.