காங்கிரஸ் கட்சியினர் வீடுகளில் கட்சிக் கொடிகள்... கே.எஸ்.அழகிரி முன்னெடுக்கும் புதிய திட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வீடுகளில் கட்சிக்கொடிகளை பறக்கவிடுவது என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளார் கே.எஸ்.அழகிரி.
அனைத்துப் பகுதிகளிலும் காங்கிரஸ் கொடி பறந்தால், மக்கள் மத்தியில் ஒரு தாக்கம் ஏற்படும் என்பதும் கட்சியை உயிர்ப்புடன் வைக்க முடியும் என்பதும் அவரது நம்பிக்கை.
மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி எழுச்சி பெறுவதற்கு கொடி பறக்கவிடப்படும் திட்டம் பெரியளவில் கைகொடுத்து உதவும் என்பது அவரது வியூகம்.
இஷ்டத்திற்கு பேசினால் காங்கிரஸ் கட்சியை யார் மதிப்பார்கள்... கே.எஸ்.அழகிரி வேதனை
காங்கிரஸ் கட்சி
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்ற முழக்கத்தை அவரது நினைவு நாளன்றும், பிறந்தநாளன்றும் காங்கிரஸ் சார்பில் கொடுக்கப்படும் விளம்பரங்களில் காண முடியும். சரி, அதற்கான முயற்சிகள் நடைபெறுகிறதா என ஆராய்ந்து பார்த்தால் துளியளவும் இல்லை என்பதே உண்மை. மேல்மட்ட அளவில் தலைவர்களுக்கு பஞ்சமில்லாத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அடிமட்ட அளவிலான தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கடும் பஞ்சம் நிலவுகிறது என்பதை அந்தக் கட்சிக்காரர்களே மறுப்பதற்கில்லை.
கட்சிக் கொடிகள்
இந்நிலையில் தமிழக மக்கள் மத்தியில் காங்கிரஸ் கொடிகள் அதிகம் தென்பட வேண்டும், அப்போது தான் அவர்களிடையே கட்சியை பற்றி ஒரு தாக்கம் ஏற்படும் எனவும் நினைக்கிறார் கே.எஸ்.அழகிரி. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் வீடுகளில் கட்சிக்கொடிகளை பறக்கவிட்டால் அது கட்சிக்கு நன்மையை தரும் என எண்ணுகிறார் இவர். காங்கிரஸ் உயிர்ப்புடனும், எழுச்சியுடன் இருப்பதாக பார்ப்பவர்கள் கருதுவார்கள் என்பது அழகிரியின் நம்பிக்கை.
கருத்துப்பூசல்
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் வீடு என பங்களாவில் தொடங்கி ஓட்டு வீடு வரை கட்சிக் கொடிகளை பறக்கவிட வேண்டும் என்பது கே.எஸ்.அழகிரியின் திட்டம். ஆனால் அவரது திட்டத்தை காங்கிரஸ்காரர்கள் செயல்படுத்த முன்வருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. காங்கிரஸை பொறுத்தவரை கோஷ்டிப்பூசலுக்கும், கருத்துப்பூசலுக்கும் பெயர்பெற்ற இயக்கம்.
ஆளுங்கட்சி செயல்பாடு
மேலும், பாஜக, அதிமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வலிமையான கருத்துக்களை எடுத்துரைக்கும் வகையில் காங்கிரஸ் நிர்வாகிகளை தயார்படுத்தும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அமெரிக்கை நாராயணன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் மூலம் இதற்கான சிறப்பு கருத்தியல் கூட்டங்களும் காணொலி மூலம் நடத்தும் திட்டத்தில் இருக்கிறார் கே.எஸ்.அழகிரி.