66 பதவிகளுக்கு 1.36 லட்சம் பேர் போட்டி... தமிழகத்தில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம் -காங்.
சென்னை: தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
66 பதவிகளுக்கு 1.36 லட்சம் பேர் போட்டியிடும் சூழல் தமிழகத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தியேட்டர்களில் 100%.. விஜய்க்கு சக்ஸஸ்தான்.. ஆனால் வெண்ணை திரண்டு வரும்போது.. தாழியை உடைக்கலாமா!
அந்நிய முதலீடு
இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியிலும், அந்நிய முதலீடுகள் பெறுவதிலும் தமிழகம் முதன்மை இடத்தில் இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி சாதனையாகக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், தமிழகத்தின் கள நிலவரத்தை ஆய்வு செய்தால் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் தான் ஏற்படுகிறது. அதற்குப் பல உதாரணங்களைச் சான்றாகக் கூறமுடியும்.
1.36 லட்சம் பேர் போட்டி
நேற்று துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. உள்ளிட்ட 66 பதவிகளுக்கான குரூப் - 1 முதல்நிலை தேர்வுக்கு 2 லட்சத்து 56 ஆயிரத்து 954 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், 1 லட்சத்து 31 ஆயிரத்து 264 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 51.08 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 1 லட்சத்து 25 ஆயிரத்து 690 பேர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமல் தேர்வு எழுத வரவில்லை. இதன்படி 66 பதவிகளுக்கு 1.31 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதனால் ஒரு பதவிக்கு 1,989 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதைவிடத் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை உறுதி செய்வதற்கு வேறு புள்ளி விவரம் தேவையில்லை.
வேலை வாய்ப்பு அலுவலகம்
கடந்த ஜூலை 31 நிலவரப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டுக் காத்திருப்போர் 66.31 லட்சம் பேர். இதில் பொறியியல் பட்டதாரிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு காத்திருக்கின்றனர். வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தால் தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.
ஏமாற்று வேலை
தமிழகத்தில் நிலவிவரும் வேலையில்லா திண்டாட்டத்தை மூடிமறைத்து விட்டு, இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகத் தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவதை, நாளேடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் வெளியிடுவதைவிட ஏமாற்று வேலை வேறு என்ன இருக்க முடியும் ? தொழில் வளர்ச்சி, அந்நிய முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நிர்வாகத் திறமை
எனவே, தொழில் வளர்ச்சி குன்றி, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதை எதிர்கொள்வதற்கு உரிய நிர்வாகத் திறமையோ, தொலைநோக்குப் பார்வையோ, தொழில் வளர்ச்சிக்கான அணுகுமுறையோ இல்லாத எடப்பாடி ஆட்சியை வருகிற சட்டமன்றத் தேர்தலில் அகற்றுவதன் மூலமே, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறேன்.