யாருக்கு தெரியும்... அடுத்து என் மீதும் வழக்கு பாயலாம்... பரபரப்பை கிளப்பும் கே.எஸ். அழகிரி
என் மீதும் நடவடிக்கை பாயும் என்று கேஎஸ் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசுவதால் என்மீது நடவடிக்கை பாயும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கே.எஸ். அழகிரி, ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் என்பது அனைவருக்குமே தெரியும். சமீபத்தில் தமிழக தலைவராக வேறு ஒருவரை தலைவராக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தபோது, அதன் முக்கிய சாய்ஸ் ப.சிதம்பரமாகத்தான் இருந்தார் என்று சொல்லப்பட்டது.
ஆனால், தேசிய அளவில் முக்கிய பொறுப்புகளில் சிதம்பரம் இருந்து வந்ததால், மாநில தலைவராவதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை என்றும் கூறப்பட்டது. இருந்தாலும், அந்தப் பதவிக்கு தன்னுடைய தீவிர ஆதரவாளரான கே.எஸ். அழகிரிக்குப் பெற்றுக் கொடுத்ததே சிதம்பரம்தான் என்று காங்கிரஸ் தரப்பிலேயே கிசுகிசுக்கப்பட்டது.
அழகிரி
இந்த விசுவாசம்தானோ என்னவோ, ப.சிதம்பரம் பெயர் கசமுசா என்று அடிபடும்போதெல்லாம் கே.எஸ் அழகிரிதான் வரிஞ்சு கட்டிக்கொண்டு வருவார். மற்ற எந்த காங்கிரஸ் தலைவருக்கும் காட்டாத அக்கறை, பாசத்தை நன்றிகடனாக காட்டி வருகிறார்.
கண்டனம்
சிதம்பரம் கைதாவதற்கு முன்பும், சரி இப்போதும் சரி.. அந்த கைது நடவடிக்கையை கண்டித்து அழகிரி தன் எதிர்ப்பினை விடாமல் பதிவு செய்தும் வருகிறார். "பிரதமர் மோடியை விமர்சித்தாலேயே சிதம்பரம் மீது சிபிஐ ஏவி விடப்படுகிறது. என்ன தவறு செய்தார் ப.சிதம்பரம்" என்று காட்டமான கேள்வியை எழுப்பியவர் அழகிரி. நேற்றுகூட, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடந்த ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
காங்கிரஸ்
"பழி வாங்கும் நோக்கில் இந்த கைது நடந்துள்ளது. வன்மையாக கண்டிக்கிறேன். இந்த கைது காரணமாக, இந்தியாவில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. நான் சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மிகவும் கட்டுப்பாடான கட்சி. யார் தவறு செய்தாலும் கட்சியில் அனுமதிக்க மாட்டார்கள்.
பண தட்டுப்பாடு
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது இளைஞர்கள் அனைவரும் வேலை வாய்ப்பை பெற்றனர். தற்போது பாஜக அரசில் இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள். தொழிற்சாலைகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. பொருளாதாரம் சீரழிந்து பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல கார் கம்பெனிகள் நடத்த முடியாமல் திவாலாகி உள்ளது. இதனால் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜனதா எந்த காலத்திலும் காலூன்ற முடியாது" என்று தெரிவித்துள்ளார்.