காங்கிரஸ் எப்போதும் இந்தி திணிப்பை ஆதரிக்கவில்லை... முதல்வர் குற்றச்சாட்டுக்கு கே.எஸ்.அழகிரி மறுப்பு
சென்னை: காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எந்தக் காலத்திலும் இந்தி திணிப்பை ஆதரித்தது கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் இந்தியை திணிக்க முயற்சி நடைபெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் அதனை திடமாக மறுத்துள்ளார் கே.எஸ்.அழகிரி.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
காங்கிரஸ் கட்சியினர் வீடுகளில் கட்சிக் கொடிகள்... கே.எஸ்.அழகிரி முன்னெடுக்கும் புதிய திட்டம்
காங்கிரஸ் பதில்
மத்திய பா.ஜ.க. அரசு மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் புதிய கல்விக் கொள்கை மூலமாக மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக் கொள்கை என்பதை வலியுறுத்தியதோடு நிற்காமல் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் இந்தியை திணிக்க முயற்சி நடைபெற்றதாக கூறியிருக்கிறார். இதன் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.
உறுதிமொழி
இந்தி பேசாத மக்களுக்கு ஜவஹர்லால் நேரு வழங்கிய உறுதிமொழிக்கு, சட்டம் பாதுகாப்புக் கொடுக்கிற வகையில் ஆட்சி மொழிகள் சட்டத்தில் 1967 இல் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இத்திருத்தச் சட்டத்தின் படி மாநிலத்திற்கிடையே செய்தித் தொடர்பு மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்படும். மேலும் இந்தி மொழியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக எக்காலத்திலும் நீடிக்கும் வகையில் இச்சட்டத்திருத்தம் நிரந்தர பாதுகாப்பு வழங்கியது.
நேரு உறுதிமொழி
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பிரதமர்களாக இருந்த நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் எந்த காலத்திலும் இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்கிற முயற்சியை தடுத்து நிறுத்தியிருக்கிறார்களே தவிர, இந்தி திணிப்பை ஆதரித்தது கிடையாது. இன்றைக்கும் இந்தி பேசாத மக்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பது பிரதமர் நேரு 1959, 1961 களில் வழங்கிய உறுதிமொழிதான். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாவிட்டாலும் பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்தின் மீது இந்தி திணிப்பை செய்ய முடியாத நிலை ஏற்படுவதற்கு நேரு உறுதிமொழி தான் இன்று வரை தடையாக இருக்கிறது என்பதை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உணரவேண்டும்.
காங்கிரஸ் பதிலடி
எனவே, காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை என்றைக்குமே இந்தி திணிப்பை ஆதரித்தது கிடையாது. ஆனால், காங்கிரஸ் மீது எழுப்பப்படுகிற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதிலடி கொடுக்கிற வகையில் 60 ஆண்டுகளுக்கு முன்பே பண்டித நேரு தொலைநோக்குப் பார்வையோடு தமிழக மக்களின் மொழியுணர்வுக்கு மதிப்பளித்து எந்த காலத்திலும் இந்தி மொழி திணிக்கப்படாத வகையில் உறுதிமொழி வழங்கியதோடு மட்டுமல்லாமல் சட்டத்தின் மூலமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.