2018ஐ அதிர வைத்த கள்ளக்காதல்.. இரு குழந்தைகளை கொன்ற அபிராமி ஏற்படுத்திய அதிர்வலை!
சென்னை: இளமை வேகத்தில் கள்ளக்காதலுக்காக இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற குன்றத்தூர் அபிராமியால் 2018ம் ஆண்டு தமிழகத்தில் அதிர்வலை ஏற்பட்டது.
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் விஜய். தனியார் வங்கி ஊழியரான இவர், அபிராமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அஜய் என்ற 7 வயது மகனும், கார்னிகா என்ற 4 வயது மகளும் இருந்தனர்.
அன்பான கணவனும், மனைவியுமாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி விஜய்க்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. மாத கடைசி என்பதால், நிலுவையில் உள்ள ஆவணங்களை முடிக்க விஜய் அலுவலகம் சென்று விட்டார்.
குழந்தைகளுக்கு விஷம்
வீட்டில், அபிராமியும், குழந்தைகளும் மட்டும் இருந்தனர். தனது அலுவலக பணிகளை முடித்து விட்டு, தனது வீட்டுக்கு காலை வந்தார் விஜய். வீட்டின் கதவு சாத்தப்பட்டு, வெளிப்புறமாக தாழ்ப்பாள் மட்டும் போடப்பட்டு இருந்தது. கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு தனது 2 குழந்தைகளும், வாயில் நுரை தள்ளிய நிலையில் கட்டிலில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தனிப்படை அமைப்பு
இதனிடையே, தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டதால், காவல்துறைக்கு பயந்து அபிராமி தப்பிச்சென்றது தெரிய வந்தது. தப்பியோடிய அபிராமியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பின்னர், நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்த அபிராமியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். முன்னதாக விஜயிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அபிராமிக்கும், வீட்டின் அருகே இருந்த பிரியாணி கடை ஊழியர் சுந்தரம் என்பவருக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரிய வந்தது.
கள்ளகாதலன் கைது
கள்ளக்காதலால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், தனது 2 குழந்தைகளுக்கும் மட்டுமின்றி, கணவன் விஜயையும் அபிராமி கொலை செய்ய முயற்சி செய்தது அம்பலமானது. இதனைதொடர்ந்து, அபிராமியின் கள்ளக்காதலனான பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அபிராமி வாக்குமூலம்
எங்கள் நட்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ஏற்பட்டது. அது காமத்தில் முடிந்தது. மேலும், என் கணவர் இரவு பணி என்று அடிக்கடி சென்றுவிடுவதால், என் இளமை என்னை தூங்க விடவில்லை. தெருவில் இருந்த இளசுகள் முதல் பெருசுகள் வரை என்னை பார்த்து ஜொல்லுவிட்டனர். கணவர் என்னை கண்டுகொள்ளாமல் இருந்ததால், பிரியாணி அதிகம் கொடுத்து சுந்தரம் வீசிய கள்ளக்காதல் வலையில் சிக்கியதாக அபிராமி தெரிவித்தார்.
வீடியோவில் விளையாட்டு
மியூசிகலி வீடியோ மூலம் இருவரும் செய்த சேட்டைகள் வெளியாகின. ஆபாசமாக பேசும் வசனங்களை பேசி, வீடியோவிலேயே விளையாடி இருந்தனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. குலுங்கி, குலுங்கி சிரித்த இருவரும், செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பின் கலங்கி போயினர்.
ஜாமீன் தள்ளுபடி
முகத்துடன் இருந்த அபிராமியை பார்க்க, கணவனோ, உறவினர்களோ யாரும் வரவில்லை. அபிராமியும், சுந்தரமும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சுந்தரத்தை பார்க்க, அவரது காதல் மனைவி மட்டும் சோகத்துடன் நீதிமன்றம் வந்திருந்தார். இதனிடையே, டிசம்பர் 21ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அபிராமி தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.