தம்பி.. எத்தனை வருஷமா பிரஸ்ல இருக்கீங்க.. நிருபரிடம் ஆவேசமான குஷ்பு.. என்ன நடந்தது?
சென்னை: தம்பி எத்தனை வருஷமா பிரஸ்ல இருக்கீங்க என்று நிருபரை பார்த்து, எரிச்சலுடன், கேள்வி எழுப்பினார் குஷ்பு.
காங்கிரசிலிருந்து திடீரென ராஜினாமா செய்துவிட்டு, நேற்று பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு. இதையடுத்து இன்று தமிழக பாஜக தலைமையகமான கமலாலயம், வருகை தந்தார் குஷ்பு.
அப்போது மகளிரணியினர், அவருக்கு ஆரத்தி எடுத்தனர். வெற்றி திலகம் வைத்தனர். தலை மீது பூ தூவி வாழ்த்து கோஷம் எழுப்பினர்.
வெட்கமாயில்ல பாஜகவுக்கு.. அப்படின்னு திட்டிட்டு அங்கயே போயிட்டாரே குஷ்பு.. எப்படி தாக்கு பிடிப்பார்!
குஷ்பு பிரஸ் மீட்
இதன்பிறகு கமலாலயம் உள்ளே செய்தியாளர்களை சந்தித்தார் குஷ்பு. அப்போது சற்று ஆவேசமாக, காணப்பட்டார் குஷ்பு. பல்வேறு விஷயங்களை பேட்டியில் பேசினார் குஷ்பு. தான் ஏன் பாஜகவில் இணைந்தேன் என்பது குறித்து விளக்கம் அளித்தார். மோடி முத்தலாக் சட்டம் கொண்டு வந்தபோது காங்கிரசிலிருந்தும் வாழ்த்தினேன். 120 கோடி மக்கள் ஒரு தலைவரை திரும்பவும் தேர்ந்தெடுத்து பிரதமராக்கியுள்ளார்கள் என்றால் அவர் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றார் குஷ்பு.
எத்தனை வருஷமா பிரஸ்ல இருக்கீங்க?
அப்போது ஒரு நிருபர், நீங்கள், பாஜகவில் சேர காரணம், உங்கள் கணவர் சுந்தர்.சி என்று காங்கிரஸ் தலைவர் அழகிரி சொன்னாரே? என்று கேள்வி எழுப்பினார். இதனால் மேலும் ஆவேசமானார் குஷ்பு. தம்பி நீங்க எத்தனை வருஷமா பிரஸ்ல இருக்கீங்க? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த நிருபர், அழகிரி சொன்னதைத்தான் கேட்கிறேன் என்றார்.
கேவலமான சிந்தனை
ஆனாலும் விடாத குஷ்பு, "சும்மா சொல்லுங்க.." என்றார். அதற்கு அந்த நிருபர், 10 வருடங்கள் என்றார். உடனே குஷ்பு, எனது அரசியல் பயணம் ஆரம்பித்தே 10 வருஷம் ஆகிவிட்டது. இதுவரை எந்த அரசியல் நிகழ்ச்சியிலாவது என்னையும், கணவர் சுந்தரையும் சேர்த்து பார்த்துள்ளீர்களா. கிடையாது. ஆனாலும், அவர்கள் புத்தி எப்படி போகிறது?. கணவரால் வலியுறுத்தப்பட்டு கட்சி மாறினேன் என்கிறார்கள். வெறும் நடிகையாகத்தான் மக்கள் என்னை பார்த்தார்கள் என்கிறார்கள். இதெல்லாம், அவர்கள் சிந்தனை எவ்வளவு கேவலமானது என்பதன் அடையாளம்.
மக்கள் நாடித்துடிப்பு
தமிழகத்தில் எனக்கு முன்பாக பாஜகவில் உழைத்து வருகிறார்கள். அவர்கள்தான் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள். என்னைவிட அவர்களுக்குத்தான் பாஜக ஆதரவாளர்கள், மக்களின் நாடித்துடிப்பு தெரியும். நான் உடனே போட்டியிட போவதாக கூற முடியாது. அது சீனியர் தலைவர்கள் முடிவு. இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.
குஷ்பு அதிருப்தி
குஷ்பு திமுகவில் கருணாநிதி முன்னிலையிலும், காங்கிரசில் சோனியா காந்தி முன்னிலையிலும் இணைந்தார். ஆனால் பாஜகவில் அக்கட்சி தலைவர் ஜேபி நட்டா அதே அலுவலகத்தில் இருந்தபோதிலும், தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் குஷ்பு இணைக்கப்பட்டார். இதனால் குஷ்பு தரப்பில் அதிருப்தி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் இன்றைய பிரஸ் மீட்டில் ஆவேசம் காட்டினார்.